அருட்தந்தை பாஸ்கரனுக்கு பிணை!

மாவீரர் நாள் அனுஷ்டிக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட யாழ் மடுத்தினார் குருமட அதிபர் அருட்தந்தை பாஸ்கரன் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால் இன்று (28) பிணையில் விடுவிக்கப்பட்டார்.

குருமடத்திற்கு முன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக அருட்தந்தை யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் நீதிமன்றத் தடை உத்தரவை மீறி நினைவேந்தலை நடத்த முயன்றமை உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுகளை முன்வைத்து இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அவர் முற்படுத்தப்பட்டார்.

அருட்தந்தை சார்பில் சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் முன்னிலையாகி பிணை விண்ணப்பத்தை முன்வைத்து சமர்ப்பணம் செய்தார்.

பிணைக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த பொலிஸார், அருட்தந்தைக்கு வெளி நாடுகளில் இருந்து நிதிப் பங்களிப்பு கிடைப்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மன்றுரைத்தனர்.

எனினும் அருட்தந்தையை ஒரு லட்சம் ரூபாய் ஆள் பிணையில் விடுவிக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் வழக்கு விசாரணை வரும் மார்ச் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!