வவுனியாவில் மேலும் இருவருக்கு கொரோனா!- 4 பாடசாலைகளை மூட உத்தரவு.

வவுனியாவில் நேற்று மேலும் இருவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. வவுனியா கற்குழியைச் சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி மற்றும் திருநாவற்குளத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இருவரும் சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்குச் சென்ற நிலையில் எழுமாறாக அவர்களிடம் மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இவர்கள் சமூகத்தில் இருந்து அடையாளம் காணப்பட்டமையால் பொதுமக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, பம்பைமடு தனிமைப்படுத்தல் மையத்தில் உள்ள தெற்கினைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே, சமூகத்தில் இருந்து இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், வவுனியா தெற்கு வலயத்தைச் சேர்ந்த நான்கு பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் மறு அறிவிப்புவரை இடைநிறுத்தப்படுவதாக வவுனியா தெற்கு வலய கல்விப் பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் இறம்பைக்கும் மகளீர் மகா வித்தியாலயம், தமிழ் மத்திய மகா வித்தியாலயம், இலங்கை திருச்சபை தமிழ் கலவன் வித்தியாலயம், காமினி மகா வித்தியாலயம் ஆகியனவே இவ்வாறு மூடப்பட்டுள்ளன.

வவுனியா – கற்குழி பகுதியில் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர் இலங்கை திருச்சபை தமிழ்க்கலவன் பாடசாலையில் தரம் 10ல் கல்விபயிலும் மாணவி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த மாணவி நேற்று பாடசாலைக்கு சென்று திரும்பியதாகவும் எட்டு பாடவேளையும் அனைத்துப் பாடங்களும் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!