தீவிர கண்காணிப்பில் இருக்கும் பிரித்தானியாவில் இருந்து தமிழகம் வந்த 2800 பேர்!

இங்கிலாந்திலிருந்து தமிழகம் வந்துள்ள 2,800 பேர் மருத்துவர்களின் முழு கண்காணிப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அனைவரும் சுகாதாரத்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை என 3 அடுக்கு வளையத்தில் கண்காணிப்பில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் தற்போது கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வேகமாக பரவி வருகிறது. தினசரியும் அங்கு 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக கொடுக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும் நீக்கப்பட்டு தற்போது மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, பிரிட்டனில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் மற்றும் கப்பல்களுக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன.

இதனிடையே புதுக்கோட்டை மாவட்டம் வீரப்பட்டில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், லண்டனிலிருந்து வந்தவர்களின் மாதிரிகள் ஆய்வில் உள்ளது, அவரோடு பயணித்த 37 பேரில் 33 பேருக்கு நோய் தொற்று இல்லை என்று கூறினார்.

கடந்த சில தினங்களில் தமிழகத்தில் உள்ள பல்வேறு விமான நிலையங்களுக்கு இங்கிலாந்திலிருந்து வந்த சுமார் 2,800 பேர் மருத்துவர்களின் முழு கண்காணிப்பில் உள்ளதாக கூறினார்.

லண்டனில் இருந்து தமிழகம் திரும்பியவரின் பரிசோதனை முடிவு இன்னும் வரவில்லை. அவர்கள் அனைவரும் சுகாதாரத்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை என 3 அடுக்கு வளையத்தில் கண்காணிப்பில் உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா முழு கட்டுப்பாட்டில் உள்ளது. பொதுமக்கள் உருமாறிய புது வகையான வைரசை நினைத்து தேவையற்ற பதட்டமோ, பயமோ கொள்ள வேண்டாம் என்று கூறினார்.

இதனிடையே இங்கிலாந்தில் இருந்து திருவள்ளூர், நீலகிரி மாவட்டங்களுக்கு திரும்பியுள்ளவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் அவர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் இருந்து காஞ்சிபுரம் திரும்பிய 7 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக அம்மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!