ஆட்சிக்கு வந்தால் இலவசம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது: சீமான்!

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவசம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தமிழகத்தில் இப்போது நாம் தமிழர் கட்சி வளர்ந்து வரும் கட்சியாக உருவெடுத்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சிக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது. இந்த தைரியத்தின் காரணமாக, வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும், 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடப்போவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருந்தார்.

இதற்காக பரப்புரையில் இருக்கும் சீமான் இருக்கிறார்.

இந்நிலையில், சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில், வீரமங்கை வேலுநாச்சியாரின் 224-ம் ஆண்டு நினைவு நாள் மற்றும் எழுத்தாளர் தொ.பரமசிவன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட சீமான் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது, நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டாம் என்று நான் சொல்லவில்லை, ஒரு நடிகர் நடிப்பதால் மட்டுமே அரசியலுக்கு வந்துவிடலாம் என்ற தகுதி இருப்பதை நாங்கள் ஏற்கவில்லை.

தொடக்க காலத்தில் இருந்தே தம்பி விஜய் மீது எனக்கு பேரன்பு உண்டு. நடிகர் சூர்யா பொது பிரச்சினைக்காக துணிந்து பேசுகிறார்.

குறைந்தபட்சம் சூர்யா அளவுக்காகவாவது குரல் கொடுத்திருக்க வேண்டும். பொது மக்களுக்காக போராடி விட்டு, அவர்களின் நன்மதிப்பை பெற்று அரசியலுக்கு வாருங்கள்.

வைகோவுக்கு என்னை திட்ட வேண்டும். அவர் பெரியவர் திட்டுகிறார். நான் சிறியவன், கேட்டுக்கொள்கிறேன். எம்.ஜி.ஆர். நல்லவர் என்றால் ஏன் வைகோ தி.மு.க.வில் இருந்தார். அ.தி.மு.க.வுக்கு சென்று இருக்கலாமே?.

இலவசம் என்ற வார்த்தையை கூறி தமிழகத்தில் ஏழ்மையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவசம் என்ற வார்த்தைக்கு இடம் இருக்காது. கல்வி, மருத்துவம், தரமான குடிநீர் இலவசமாக தரப்படும் என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!