வீணடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்ட அமெரிக்கர்கள்: மருந்தாளரின் அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம்

அமெரிக்காவில் விஸ்கான்சின் மருத்துவமனை மருந்தாளர் ஒருவர், இந்த வாரத் தொடக்கத்தில் 57 மருந்து குப்பிகளை குளிர்சாதனப் பெட்டியில் சேமிக்காமல் வெளியே வைத்துவிட்டார். இதனால், மருந்துகளை பொறுப்பற்ற முறையில் வீணடித்ததற்காக, கடந்த வியாழக்கிழமை அவர் கைது செய்யப்பட்டார். மேலும், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு குப்பியும் 10 டோஸ்களை உள்ளடக்கியது. அதாவது 570 கொரோனா வைரஸ் தடுப்பூசி டோஸ்களை அவர் நாசப்படுத்தியுள்ளார்.

இதில் சிக்கல் என்னவென்றால், இவை முறையாக குளிரூட்டப்பட்ட பெட்டியில் சேமிக்கப்படவில்லை என தெரியவருவதற்குள், இந்த மருந்துகளிலிருந்து கிட்டத்தட்ட 60 டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. பிறகு, மீதமுள்ள 500க்கும் மேற்பட்ட டோஸ்கள் நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சரியான வெப்ப நிலையில் சேமிக்கப்படாத இந்த மருந்தால், இதனை செலுத்திக்கொண்டவர்களுக்கு என்ன ஆகும் என்ற அச்சம் எழுந்தது.

இந்நிலையில், தடுப்பூசி தயாரிப்பாளரான மாடர்னா, குளிரூட்டியில் இருந்து அகற்றப்பட்ட டோஸ்களை உட்செலுத்துவைத்தால் எந்தவொரு உடல்நிலைப் பிரச்சினையையும் ஏற்படுத்தாது என்று மருத்துவமனைக்கு உறுதியளித்துள்ளது.

இதனால், செலுத்தப்பட்ட மருந்து அவர்களை தொற்றிலிருந்து பாதுகாப்பற்ற நிலையிலேயே வைத்திருக்கும் என்பதைத் தவிர, வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அரோரா ஹெல்த் கேர் மருத்துவக் குழுமதத்தின் தலைவர் டாக்டர் ஜெஃப் பஹ்ர் தெரிவித்துள்ளார்.

பதிலாக, அந்த 60 டோஸ்களை பெற்றவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மீண்டும் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தவேண்டியிருக்கும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!