இலங்கை வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது!

சர்வதேசத்திற்கும், இந்தியாவிற்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசாங்கத்துக்கு சொல்லியிருப்பதாக நாடாளுமன்ற. உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையிலான ஆலோசனைக் கூட்டம் வவுனியாவில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் பின்னர் கருத்தத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“கடந்தவாரம் கிளிநொச்சியில் இடம்பெற்ற சந்திப்பிற்குப் பின்னர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினையும் இணைத்து தெளிவான ஒரு கலந்துரையாடல் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இங்கே இருக்கின்ற சிவில் சமூகப் பிரதிநிதிகள், அரசியல்கட்சிகள், பாதிக்கப்பட்டவர்கள் என அனைவரது தரப்பும் இணைந்து மார்ச்சில் இடம்பெறவுள்ள ஜெனிவா மனித உரிமைப் பேரவை அமர்வில் பொதுவான நிலைப்பாடு ஒன்றை முன்வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்திருக்கிறது.

அதுதொடர்பாக அனைத்து தரப்புக்களிடமும் கலந்துரையாடி ஒரு வரைபைத் தயாரித்து அந்த நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தீர்மானித்துள்ளோம்.

இதேவேளை, நான் தயாரித்ததாக கட்சிகளால் நிராகரிக்கப்பட்ட வரைபு புலம்பெயரந்த அமைப்புக்களால் வரையப்பட்டது. அதனை நான் வரைந்ததாகத் தெரிவித்து இரு கட்சியினர் நிராகரித்துவிட்டனர். பின்னர் அதற்கு விக்னேஸ்வரன் ஐயா அனுமதியை வழங்கியிருப்பதாக மின்னஞ்சல் ஒன்றைப் பார்த்தேன்.

நான் வரைந்தபடியால் நிராகரிக்கப்பட்டிருந்தது. நான் வரையவில்லை எனத் தெரிந்ததும் ஏற்றுக்கொண்டது போல தெரிகிறது. அது ஒருபக்கம் இருக்கட்டும். நாம் இதுவரை பேசி இணக்கப்பாடு ஏற்பட்ட விடயங்களை அடிப்படையாக வைத்து ஒரு நிலைப்பாட்டிற்கு வரலாமா என்பது குறித்து ஆராய்வோம்.

அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பாக அரசாங்ககத்துக்கு முன்வைத்துள்ள யோசனைகளில் மாகாணசபை பற்றி தீர்க்கமாக எழுதியிருக்கிறோம். மாகாணசபை முறையை ஒழிப்பதற்கு இடம்கொடுக்க முடியாது. அதிலே பாரிய பின்விளைவுகள் இருக்கிறது.

இலங்கை அரசாங்கம் வெவ்வேறு ஜனாதிபதிகளின் கீழே சர்வதேசத்திற்கும் இந்தியாவிற்கும் தங்களது வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள். அதை எல்லாம் மீறி இலங்கை அரசாங்கம் செயற்படமுடியாது என்ற உண்மையை அவர்களுக்கு சொல்லியிருக்கிறோம். அதனையும் மீறி இலங்கை அரசாங்கம் செயற்பட்டால் எமது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்னவென்பது குறித்த முடிவுகளை எடுப்போம்” என்று குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!