வட, கிழக்கு மக்கள் பிரச்சினைகளுக்கு ஒத்துழைப்பதாக ஜெய்சங்கர் வாக்குறுதி வழங்கினாராம்

கிழக்கு மக்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனிடம் உறுதியளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்றைய தினம் உத்தியோகபூர்வ விஜயமென்றினூடாக இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், ஜனாதிபதி உள்ளிட்ட வெளிவிவகார அமைச்சர் மற்றும் அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகளையும் சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

இதன்படி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை கொழும்பிலுள்ள தனியார் விடுதியொன்றில் சந்தித்து கலந்துரையாடிய போதே இந்திய வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சுமார் இருபது நிமிடங்களிற்கு மேலாக இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் போது வட, கிழக்கு தமிழ் மக்கள் பொதுவாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்தும், கிழக்கு மாகாண மக்களிற்கு இருக்கின்ற விசேடமான பல்வேறுபட்ட அபிவிருத்தி சார்ந்த நடவடிக்கைகள், அதிலும் குறிப்பாக வீட்டுத்திட்டம், குடிநீர் பிரச்சினை மற்றும் மலசல கூடங்கள் உட்பட வாழ்வாதார கட்டமைப்புக்களை ஏற்படுத்துதல், போன்றவை தொடர்பாக வியாழேந்திரனினால் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இத்த கோரிக்கைகளை செவிமடுத்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் நாட்களில் தமிழ் மக்களுக்கான பல்வேறுபட்ட திட்டங்களை முன்னெடுப்பதில் தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக வாக்குறுதியளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சரின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!