அரிசி உற்பத்தியாளர்களுக்கு கடன் வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு நடவடிக்கை – பிரதமர் அறிவுறுத்தல்

சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி உற்பத்தியாளர்களுக்கு கடன் வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அறிவுறுத்தியுள்ளார்.

அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் நாடாளுமன்ற குழு அறை 2 இல் நேற்று இடம்பெற்றது.

நாட்டில் காணப்படும் உத்தரவாத நெல் விலைக்கு ஏற்ப எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01ஆம் திகதி முதல் 06 மாதங்களுக்கு ஒருமுறை அரிசிக்கான நிர்ணய விலையை பெற்றுக் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு நிவாரண வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பாரிய அளவிலான அரிசி உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு முன்னதாக சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, குறித்த கலந்துரையாடலில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவன்ன, ஷெஹான் சேமசிங்க, இந்திக அநுருத்த, அஜித் நிவாட் கப்ரால், ஷஷீந்திர ராஜபக்‌ஷ, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, பிரதமரின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன, வங்கி, சதொச மற்றும் நெல் விநியோக சபை அதிகாரிகள் உள்ளிட்ட அரச நிறுவனத் தலைவர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!