திருகோணமலை பிரதேச சபையை கூட்டமைப்பிடம் இருந்து கைப்பற்றியது மொட்டு!

25 வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த திருகோணமலையின் பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் சபையின் அதிகாரத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றியுள்ளது.

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் புதிய தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆர்.ஏ.ரி. எஸ்.டீ. ரத்நாயக்க தெரிவாகியுள்ளார்.

2018ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 07 உறுப்பினர்களுடன் சபையைக் கைப்பற்றியது. நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆதரவுக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் 12 வாக்குகள் பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 10 வாக்குகளே கிடைத்தன.

சபையில் கூடுதலான உறுப்பினர்கள் திறந்த வாக்கெடுப்புக்கு விருப்பம் தெரிவித்ததற்கமைய திறந்த வாக்கெடுப்பு நடைபெற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் க.தங்கராசாவின் பெயர் முன்னாள் தவிசாளர் வைத்தியர் ஞானகுணாளனினால் முன்மொழியப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஆர். அமுதவல்லியால் வழிமொழியப்பட்டது.

பொதுஜன பெரமுன சார்பில் உறுப்பினர் ரத்னாயக்காவின் பெயர் உறுப்பினர் ஏ.ஸி.பைரூஸால் முன்மொழியப்பட்டு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் எஸ்.பாலகிருஷ்ணனினால் வழிமொழியப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களில் இரு உறுப்பினர்கள் பொதுஜன பெரமுன உறுப்பினருக்கு சார்பாகவும் மற்றைய உறுப்பினர் நவ்பர் (உபதலைவர்) தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினருக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.

அத்துடன் வரதர் அணி உறுப்பினர் சி. விபுசன், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் எஸ்.பாலகிருஷ்ணன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காலிகிரஸ் உறுப்பினர் இருவர் ஆகியோர் பொதுஜன பெரமுன உறுப்பினருக்கு சார்பாக வாக்களித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!