உருமாறிய கொரோனா: நாட்டு மக்களை எச்சரித்த ஜப்பான் அரசு!

ஜப்பானில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலில் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என அரசு எச்சரித்து உள்ளது. ஜப்பானில் சமீப நாட்களாக கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது. கடந்த 7-ம் திகதி முதல் அங்கு நாள்தோறும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் கொரோனாவுக்கு எதிரான கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

அதேநேரம் இந்த கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு தண்டனைகளை தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. சுகாதாரம், தொழிலாளர் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகங்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அந்த வகையில் தொற்று கண்டறியப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற மறுத்தால் அவருக்கு சுமார் ரூ.7 லட்சம் வரை அபராதமோ அல்லது 1 ஆண்டு சிறை தண்டனையோ விதிக்கப்படும்.

அதைப்போல நோயாளிகளுடனான தொடர்பாளர்களை கண்டறிவதில் இடையூறு ஏற்படுத்துவோருக்கு ரூ.3½ லட்சம் வரை அபராதமோ அல்லது 6 மாதங்கள் வரையிலான சிறை தண்டனையோ விதிக்கப்படும்.

இந்த தண்டனைகளுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் சார்பில் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!