குருந்தி விகாரையாக மாற்றப்பட்ட வரைபடத்தை ரத்து செய்ய வேண்டும்!

குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்ட எல்லை மீள் நிர்ணய நடவடிக்கை ஊடாகத் தயாரிக்கப்பட்ட வரைபடத்தை, உடன் இரத்துச் செய்ய வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார் அத்துடன் இது தொடர்பில் விசாரணை முன்னெடுக்க வேண்டுமென்றும் அவர் நாடாளுமன்றத்தில் கோரியுள்ளார்.

பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வில், உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘தமிழர்களின் நிலங்கள் மோசமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது எனவும், மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். ஆகையால், இதற்கு அவசரமான தீர்வு வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ள அவர், மண்டைதீவு பகுதியில் இடம்பெற்ற காணி சுவீகரிப்பு நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தினோம். இருப்பினும், இந்த வாரம் முழுவதும் நில அளவை செய்யப்படவுள்ளது என்றார்.

அதேபோல், குருந்தூர் பகுதிக்கு அண்மையில் சென்றோம். இதன்போது, அங்குள்ள காட்டு மரங்கள் வெட்டப்பட்டு, பாதைகள் செப்பனிடப்பட்டுக் கொண்டு இருந்தன. அத்துடன், நூல்களால் எல்லையிடப்பட்டும் இருந்தது. அத்துடன், கட்டுமானத்துக்கான அத்திபாரமும் வெட்டப்பட்டிருந்தது. இதைக் கேட்டபோது, தொல்லியல் இடம் எனத் தெரிவிக்கப்பட்டது’ என்றார்.

இந்தப் பகுதி தமிழர்களுக்குச் சொந்தமானது எனத் தெரிவித்த அவர், 2018 ஆம் ஆண்டில், தமிழர்கள் இங்கு வழிபடத் தடையில்லை என முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இங்கு வழிபட அனுமதி மறுக்கப்பட்ட, இந்தப் பகுதியை புத்தமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் சாடினார்.

‘கடந்தாண்டு டிசெம்பர் மாதம், இந்தப் பகுதியில் நிலஅளவை முன்னெடுக்கப்பட்டு, எல்லை மீள் நிர்ணயம் செய்யப்பட்டு, வரைபடமொன்று தயாரிக்கப்பட்டது. இந்த நிலஅளவைப் பணி, முல்லைத்தீவு மாவட்ட நிலஅளவை அதிகாரிகளால் முன்னெடுக்காது, கொழும்பில் இருந்து வந்த அதிகாரியால் முன்னெடுக்கப்பட்டது’ என்றார்.

அந்த நிலஅளவை அடிப்படையிலேயே, வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், அந்த இடம் குருந்தி விகாரைக்குச் சொந்தமானது என அவ்வதிகாரி குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த வரைபடம் உடனடியாக இரத்துச்செய்யப்பட்டு, இது தொடர்பில் விசாரணை முன்னெடுக்க வேண்டுமென்றுஇ அவர் கேட்டுக்கொண்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!