அமெரிக்காவை அதிரவைத்த அதிபர் ஜோ பைடன்!

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக 78 வயதான ஜோ பைடன் நேற்று முன்தினம் பதவி ஏற்றார். அமெரிக்க ஜனாதிபதியாக வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் வந்து அமர்ந்த முதல் நாளிலேயே ஜோ பைடன் செயல்பட தொடங்கி விட்டார். ஒரே நாளில் அவர் அதிரடியாக 15 நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்தார். அவற்றில் பல உத்தரவுகள் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் உத்தரவுகளை மாற்றி அமைத்தது ஆகும்.

ஜோ பைடன் பிறப்பித்த முதல் உத்தரவு, 100 நாட்களுக்கு அமெரிக்கர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். அமெரிக்காவின் மத்திய அரசு இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதாகும்.

மற்ற உத்தரவுகளில் முக்கியமானவை:-

* 2016-ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகும் முடிவை முந்தைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எடுத்திருந்தார். இப்போது மீண்டும் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்காவை சேர்க்கும் நடைமுறையை தொடங்க வேண்டும்.

* கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் அறிவித்திருந்தார். அந்த முடிவு நிறுத்தம்.

* ஈரான், சிரியா, லிபியா, ஏமன் உள்ளிட்ட சில குறிப்பிட்ட முஸ்லிம் நாடுகள் மீது டிரம்ப் பிறப்பித்த பயண தடைகள் ரத்து.

* மெக்கிகோ எல்லைச்சுவர் கட்டுமானம் உடனடி நிறுத்தம்.

இந்த நிர்வாக உத்தரவுகளின் சிறப்பம்சம், இவற்றை செயல்படுத்த நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறத்தேவையில்லை. அதே நேரத்தில் நாடாளுமன்றம் விவாதித்து நிராகரிக்கலாம். அப்படி நாடாளுமன்றம் நிராகரித்தால் தனது மறுப்பு ஓட்டுரிமை (வீட்டோ) அதிகாரத்தை பயன்படுத்தி, ஜோ பைடன் அதை நிராகரிக்கலாம்.

ஜோ பைடன் முதன்முதலாக அமெரிக்க ஜனாதிபதியாக பத்திரிகையாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:-

இன்றைய நிர்வாக நடவடிக்கைகளுக்காக நான் பெருமிதம் கொள்கிறேன். நான் அமெரிக்க மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதின் மூலம் எனது செயல்பாடுகளை தொடங்கப்போகிறேன். நீண்ட தூரம் செல்ல வேண்டியதிருக்கிறது. இவை நிர்வாக நடவடிக்கைகள் மட்டுமே. இவை முக்கியமானவை. ஆனால் நாம் செய்யப்போகும் பல விஷயங்களுக்கு சட்டம் தேவைப்படும்.

இனி வரும் நாட்களில் நிறைய நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்து போடுவேன்.

நாம் இன்று கொரோனாவின் கூட்டு நெருக்கடி, அதைத் தொடர்ந்த பொருளாதார நெருக்கடி, பருவநிலை மாற்றம், இனப்பாகுபாடு விவகாரம் ஆகிய பிரச்சினைகளில் செயல்பட போகிறேன் என்று அவர் கூறினார்.

முதன் முறையாக நிருபர்களை சந்தித்த வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி, ஜோ பைடன் 15 நிர்வாக உத்தரவுகளிலும், 2 குறிப்பாணைகளிலும் கையெழுத்து போட்டதாக தெரிவித்தார்.

ஒரே நாளில் ஜோ பைடன் பிறப்பித்த 15 நிர்வாக உத்தரவுகள், அமெரிக்காவை அதிர வைத்துள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!