63 வயதில் திருமணம் செய்து கொண்ட நபர்: சிறிது நேரத்தில் நேர்ந்த சோகம்!

இந்தியாவில் 63 வயதில் திருமணம் செய்து கொண்ட நபரின் மனைவி திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் பீப்பல்சட் கிராமத்தை சேர்ந்தவர் கல்யாண் பாய் (63). இவர் தனது சொந்த சாதியில் பல ஆண்டுகளாக திருமணத்துக்கு பெண் தேடியும் கிடைக்கவில்லை.

மேலும் தனது மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரர், விதவை சகோதரி ஆகியோரை கவனித்து கொள்ளும் பொறுப்பு கல்யாணுக்கு இருந்ததாலும் திருமணம் தள்ளி கொண்டே போனது.

63 வயது ஆகிவிட்டாலும் எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

அதன்படி அவரை மணந்து கொள்ள லைலாபென் ரபரி என்ற 40 வயதான பெண் சம்மதம் தெரிவித்தார். எப்படியோ தனக்கு திருமணம் நடக்க போகிறது என கல்யாண் மகிழ்ச்சியடைந்தார்.

இதையடுத்து கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நேற்று முன் தினம் கல்யாண், லைலாபென்னுக்கு தாலி கட்டி மனைவியாக்கி கொண்டார்.

திருமணம் முடிந்து புதுமணத்தம்பதி வீட்டுக்கு சென்ற போது திடீரென லைலாபென் தரையில் சுருண்டு விழுந்தார்.

இதை பார்த்து பதறிய கணவர் உள்ளிட்ட உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது லைலாபென் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.

இதையறிந்த கல்யாண் அதிர்ச்சியிலும், வேதனையிலும் கதறி அழுதார். பின்னர் மனைவியின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்தி தகனம் செய்தார்.

கல்யாணுக்கு 63 வயதில் திருமணம் நடந்ததால் மொத்த கிராமமும் மகிழ்ச்சியடைந்த நிலையில் அது சிறிது நேரம் கூட நிலைக்காமல் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!