மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் சசிகலா! காரின் முகப்பில் அதிமுக கொடி !

பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சசிகலா மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த சசிகலாவுக்கு காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்ததால் விக்டோரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கடந்த 27 ஆம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கின் தண்டனைக் காலமான 4 ஆண்டுகாலம் முடிந்ததையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலும் குறைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர் உதவியின்றி அவர் தொடர்ந்து நல்ல முறையில் சுவாசிப்பதாகவும், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். எனினும் பெங்களுருவில் ஓய்வெடுக்கும் சசிகலா, வரும் பிப்ரவரி 3 அல்லது 5 ஆம்தேதி தமிழகம் திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மருத்துவமனையில் இருந்து தனது சொந்தக் காரில் புறப்பட்டார் சசிகலா. அவருக்கு சொந்தமான காரின் முகப்பில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது.

இது குறித்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமை இல்லை என தெரிவித்துள்ளார். கட்சியில் இல்லாத ஒருவர் அதிமுக கொடியை பயன்படுத்துவது சட்டத்துக்கு புறம்பானது என தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!