2017 பிலியந்தலை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் இந்தியாவில் கைது

2017 ஆம் ஆண்டில் பிலியந்தலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மொஹமட் மாஹீர் மொஹமட் நவாஸ் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் இன்டர்போலினால் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் மதுரையிலுள்ள போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான இராஜதந்திர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பிலேயே சந்தேகநபர் இந்தியாவிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தை தவிர, போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் மொஹமட் மாஹீர் மொஹமட் நவாஸ் கைது செய்யப்பட்டதாகவும் அது தொடர்பிலான வழக்கு நிலுவையிலுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!