‘உலகத்துக்கு தலைமை பொறுப்பு வகிக்க வேண்டும்’: மோடி விருப்பம்

இந்திய தகவல் தொழில்நுட்ப துறை ஒழுங்குமுறை அமைப்பின் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- ஜனநாயகத்துக்கு சிறந்த நிர்வாகம் தேவை. மத்திய அரசை இந்திய மக்கள் நம்புகின்றனர். அரசின் சேவையை மக்களுக்கு கிடைக்க செய்துள்ளோம். முந்தைய காலத்தில் அரசின் கொள்முதல் குறித்து பல கேள்விகள் இருந்தன.

தற்போது தொழில்நுட்பம் காரணமாக அனைத்திலும் வெளிப்படைத்தன்மை நிலவுகிறது. அரசின் டெண்டர்கள் ஆன்லைன் மூலம் விடப்படுகிறது. உலக நாடுகளுக்கு, மைய மேடையாக இந்திய தொழில்நுட்பம் மாறியுள்ளது.

இந்திய தொழில்நுட்ப தலைமைப்பண்பு இன்னும் பல மடங்கு வளர வேண்டியுள்ளது. புதிய கண்டுபிடிப்புகளும், புது திட்டங்களும் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப துறைக்கு தேவைப்படுகிறது. இந்தியா சுதந்திரம் பெற்றதன் 75-வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறோம்.

புதிய இலக்குகளை நிர்ணயித்து அதனை அடைய வேண்டும். சுதந்திரம் பெற்றதன் 100-வது ஆண்டு விழாவை நாம் கொண்டாடும் போது, இந்தியா உலகத்துக்கு தலைமை வகிக்க வேண்டும். இந்திய தொழில்நுட்பம் உலகை ஆள வேண்டும்.

இந்தியாவின் எதிர்காலத்துக்கு தொழில்நுட்பதுறை முக்கிய பங்காற்ற வேண்டும். செயற்கை நுண்ணறிவு, விவசாயிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. அவர்களின் வாழ்க்கை தரத்தை மாற்ற வேண்டும்.

கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் புதிய வாய்ப்புகளும் தீர்வுகளும் தேவைப்படுகிறது. சர்வதேச தலைமை பதவியை வகிக்கும் வகையில் புதிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிலையில், ‘இந்தியா ஸ்போரா’ நிறுவனர் மற்றும் தொழிலதிபர் எம்.ஆர்.ரங்கசாமி வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட உலகெங்கிலும் உள்ள 15 நாடுகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் தலைமை பதவிகளை வகிக்கின்றனர். அவர்களில் 60 பேர் சம்பந்தப்பட்ட நாடுகளின் மந்திரிசபையில் இடம் பெற்றுள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!