9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: முதல்-அமைச்சர் பழனிசாமி!

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 23-ந்தேதி கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இதில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. நேற்று சட்டசபைக்கு விடுமுறை. இன்று காலை 10 மணிக்கு சட்டசபை தொடங்கியது. கேள்வி நேரம் முடிந்ததும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அதில் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. அம்மாவின் அரசு, இந்த நோய்த்தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டுவருகிறது.

2020-21-ம் கல்வியாண்டில் கொரோனா நோய்த்தொற்றுப் பரவலை தடுப்பதற்காக பள்ளிகள் மூடப்பட்டு, கொரோனா நோய்த்தொற்று ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 19-ந்தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.

அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்த நாக மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இந்த கல்வியாண்டு முழுவதும் மாணாக்கர்கள் கல்வி தொலைக்காட்சி மூலமாக மட்டுமே கல்வி பயின்று வந்தனர். மாணாக்கர்கள் தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும், கல்வி பயின்று வருவதில் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.

மேலும், இந்த கல்வியாண்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் கோரிக்கை கருத்தில் கொண்டும், கல்வியாளர்களின் கருத்துகளை பரிசீலித்தும், 2020-21-ம் கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும், முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத்தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது.

மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு நெறிமுறைகள் அரசினால் விரிவாக வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!