‘பி’ அறிக்கையை வைத்து பூச்சாண்டி காட்டும் பொலிஸார்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான போராட்டத்தின் பின்னர் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட ‘பி’ அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்றினால் எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாது, அதனை வைத்து பொலிஸார் பூச்சாண்டி காட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தமிழ்த் தேசிய கட்சிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் பருத்தித்துறை நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான போராட்டத்தில் பங்குகொண்டமை தொடர்பில் பொலிஸாரால் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பிரமுகர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகளும் வாக்குமூலம் பதியும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் குறித்த அறிக்கைக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்ட நகர்த்தல் பத்திரம் மீதான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது.

இதன்போது சட்டத்தரணிகள் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் சட்டத்தரணிகள் வி.திருக்குமரன், வி.மணிவண்ணன், கே.சயந்தன் உட்பட்ட 20 இற்கும் அதிகமான சட்டத்தரணிகள் பிரசன்னமாகியிருந்தனர்.

“பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள பி அறிக்கையில் என்ன குற்றம் இழைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படவில்லை. இதன்படி சட்டக்கோவையின் பிரகாரம் குற்றமிழைக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கமுடியாது. ஆனால் இந்த வழக்கினை வைத்து பொலிஸார் பூச்சாண்டி காட்டுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சட்டக் கோவையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கமுடியாது என்கிற நிலையில் பொலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு நீதிமன்றமும் உடந்தையாகச் செயற்பட முடியாது” என்றும் சட்டத்தரணிகள் வலியுறுத்தித் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் 22ம் திகதிக்கு நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!