யாழ். திரையரங்கிற்கு சென்றவர்கள் அறிகுறிகள் இருந்தால் அறிவிக்குமாறு கோரிக்கை!

யாழ்ப்பாணம் மாநகர் கார்கில்ஸ் திரையரங்குக்கு கடந்த இரண்டு வாரங்களுக்குள் திரைப்படம் பார்ப்பதற்குச் சென்றவர்களில் கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளோரைத் தொடர்பு கொள்ளுமாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்கேட்டுள்ளார்.

காய்ச்சல், தொண்டை நோ, தடிமன், தும்மல் போன்ற அறிகுறிகள் உள்ளோர் வசிக்கும் பிரதேசத்தைச் சேர்ந்த சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை அல்லது வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தின் 24 மணிநேர சேவையான 021 2226666 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கார்கில்ஸ் கட்டடத் தொகுதியில் உள்ள திரையரங்கில் பணியாற்றும் 7 பேருக்கு தொற்று உள்ளமை நேற்றுமுன்தினம் கண்டறியப்பட்டது. அதனையடுத்து திரையரங்கு தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்நிலையில் அந்த திரையரங்குக்கு கடந்த இரண்டு வாரங்களாக சென்றவர்களுக்கு வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதனாலேயே யாழ்ப்பாணம் மாநகர் கார்கில்ஸ் கட்டடத்தில் உள்ள திரையரங்குக்கு கடந்த இரண்டு வாரங்களில் திரைப்படம் பார்ப்பதற்குச் சென்றவர்களில் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் உள்ளோரைத் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!