பிரித்தானியாவில் கத்திக்குத்துக்கு இலக்கான ஆசிய வம்சாவளி பெண்!

பிரித்தானியாவில் லெய்செஸ்டர் பகுதி தெரு நடைபாதையில் மர்ம நபரால் கத்திக்குத்துக்கு இலக்கான ஆசிய வம்சாவளி பெண் தொடர்பில் புகைப்படத்துடன் தகவல் வெளியாகியுள்ளது. லெய்செஸ்டர் பகுதியில் வியாழனன்று கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமடைந்தவர் 29 வயதான கீதிகா கோயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் லீசெஸ்டரைச் சேர்ந்த 28 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,

அவர் தற்போது பொலிஸ் காவலில் இருப்பதாகவும் லீசெஸ்டர்ஷைர் பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும், கண்காணிப்பு கமெரா பதிவுகள், அப்பகுதி குடியிருப்பாளர்களிடம் விசாரணை என இந்த கொலை வழக்கு தொடர்பில் அதிகாரிகள் முனைப்புடன் செயல்படுவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

தெருவின் நடைபாதையில் பெண் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் காணப்பட்டதை அடுத்து அதிகாலை 2.25 மணியளவில் பொதுமக்கள் சிலரால் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிஸ் மற்றும் கிழக்கு மிட்லாண்ட்ஸ் ஆம்புலன்ஸ் சேவையினர் குறித்த பெண்ணை காப்பாற்ற முயன்றும், அவர் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பெண் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் எவருக்கேனும் தகவல் தெரிய வந்தால் பொலிசாருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!