தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த இணைந்து செயற்பட இணக்கப்பாடு!

எதிர்கால தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படுவதற்காக இணைந்து செயற்பட யாழ். மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளனர்.

இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு இன்று யாழ்ப்பாண ஊடக மன்றத்தில் இடம்பெற்றது.

52வீதமான பெண்களைக் கொண்ட நாடாக இலங்கை இருந்த போதும் உள்ளுராட்சி மன்றங்களைப் பொருத்தவரையில் 25வீத ஒதுக்கீடு தான் பெண்களுக்கு காணப்படுகின்றது. குறித்த 25 வீத ஒதுக்கீட்டை முழுமையாக பெற்றுக்கொள்வதிலும் சிக்கல்கள் காணப்படுகின்றன.

யாழ் மாவட்டத்தில் மொத்தமாக 100 பெண் பிரதிநிதிகள் உள்ளனர். இது 23 வீதமாகும். இந்நிலையில் பெண் பிரதிநிதித்துவத்தை ஊக்குவிக்கும் முகமாக பெண் வேட்பாளர்களை ஊக்கப்படுத்தும் திட்டத்தை நாம் கட்சி பேதமற்ற முறையில் முன்னெடுக்க முன்வரத் திட்டமிட்டுள்ளதாக ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பெண் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

பெண்களாகிய நாம் அரசியலில் ஈடுபட்ட பின்னர் மக்கள் அபிவிருத்திக்காக குரல் கொடுக்கும் வாய்ப்பு, பெண்களை பாதிக்கும் பிரச்சினைகள் பற்றி பேசும் வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது. ஆகவே எதிர்கால தேர்தல்களில் பெண் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் நாம் ஆர்வமாக உள்ளோம்.

அந்த வகையில் ஐந்து அம்சங்களை கொண்ட ஒரு பிரேரணையை முன்வைத்து நாம் செயற்பட விரும்புகின்றோம் என அவர்கள் தெரிவித்தனர்.

1 – ஆரம்பத்தில் பெண்களுக்கான 25வீத இட ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஏராளமாக பெண் உறுப்பினர்கள் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் அரசியலுக்கு வந்தாலும் இப்போது தான் அரசியலில் பெண்களுக்கான தேவை எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை அவர்கள் அதிகம் உணர்ந்துள்ளனர்.

எனவே, பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் சமுகத்தில் சகல மட்டங்களிலும் ஊக்குவிக்கப்படல் வேண்டும். எந்த விதமான நிர்ப்பந்தமும் இன்றி, பெண்கள் தாமாகவே அரசியலுக்கு முன்வரவேண்டும். இதனை பெண்களின் உரிமையாக சமூகமும் கருத வேண்டும். அத்தோடு, இப்போது பிரதிநிதிகளாக இருப்பவர்களின் ஆற்றலை அதிகரிக்கும் செயல்திட்டங்களும் ஊக்குவிக்கப்படல் வேண்டும்.

2 – முன்னைய காலங்களில் இருந்து வந்த எதிர்ப்புகள் இப்போது குறிப்பிடத்தக்க அளவு குறைந்து வருகின்றது. குறிப்பாக எங்கள் குடும்பத்திலும் சமூகத்திலும் இப்போது பெண்கள் அரசியலில் ஈடுபடுவது தொடர்பான விழிப்புணர்வு ஓரளவிற்கு அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் அவ்வாறு இருக்கவில்லை. இந்த நிலையில் புதிய மற்றும் தகுதிவாய்ந்த பெண்கள் அரசியில் பிரவேசிக்க வேண்டும். இதன் மூலம் 25வீத இட ஒதுக்கீட்டை நாம் முழுமையாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

3 – இளம் பெண்கள் அரசியலுக்கு முன்வரவேண்டும். தற்போது உள்ள பிரதிநிதிகளில் அதிகமானவர்கள் வயதானவர்களாக இருந்தாலும் அவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சமூக சேவைகளை ஆற்றி வருகின்றனர். பெண்களைப் பாதிக்கும் விடயங்களில் சாதகமான தீர்மானங்களை எடுக்கின்றனர். பெண்களின் கிராம மட்டப் பிரச்சினைகளுக்காக அவர்கள் குரல் கொடுக்கின்றனர். வயதான காலத்தில் அரசியலில் ஈடுபட்டு அவர்களால் பல பணிகளை ஆற்ற முடியும் என்றால் இளம் வயதினர் அரசியலில் ஈடுபட்டால் அதிக ஆர்வத்துடனும் செயலதிறனுடனும் அவர்களால் செயற்பட முடியும் என்பதை நாம் உணர்கின்றோம். எனவே இளம் பெண்கள் அதிகம் ஊக்கபடுத்தப்பட வேண்டும்.

4 – ஜனநாயக விழுமியங்களை பாதுகாத்து சமூகத்திற்காக பணியாற்றக்கூடிய ஒரு பெண்ணை நீங்கள் அடையாளம் கண்டால் அவரை ஊக்கப்படுத்தி உங்களுடைய வாக்குகளில் முதன்மையான வாக்கை ஒரு பெண்ணுக்கு செலுத்துவதன் மூலம் பெண்களின் அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதனையும் நாம் எமது கோரிக்கையாக முன்வைக்கின்றோம்.

5 – உள்ளுராட்சி மன்றங்களைத் தாண்டி சட்டங்களை ஒழுங்கமைக்கும் இடம் நாடாளுமன்றமாக இருப்பதனால் நாடாளுமன்ற தேர்தலில் பெண்களை இருப்பும் நிலைநிறுத்த செயற்படல் வேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!