மியான்மரில் 7 வயது சிறுமியை சுட்டுக்கொன்ற இராணுவம்: கதறும் குடும்பம்!

மியான்மரில் குடியிருப்புக்குள் இருந்த 7 வயது சிறுமி இராணுவத்தின் துப்பாக்கி குண்டுக்கு பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலேவில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. குடியிருப்புக்குள் இருந்த சிறுமி, இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் கொல்லப்பட்டார் என்பதற்கு நேரடி சாட்சிகளும் உள்ளனர்.

கடந்த மாத இராணுவ ஆட்சி மாற்றத்திற்கு எதிரான ஒடுக்குமுறையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் இவர் மிகவும் இளையவர் என கூறப்படுகிறது.

இதனிடையே, மொத்தம் 164 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாக இராணுவம் கூறுகிறது, ஆனால் மனித உரிமை குழுக்கள் இந்த எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக கூறுகின்றன.

மட்டுமின்றி, மியான்மர் இராணுவத்தின் ஒடுக்குமுறையால் இதுவரை 20 சிறார்கள் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், 11 வயது சிறுமி உட்பட குறைந்தது 17 குழந்தைகள் தன்னிச்சையான தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் குழு கூறியுள்ளது.

திங்கட்கிழமை இராணுவம் முன்னெடுத்த துப்பாக்கி சூடில் 14 வயது சிறுவன், துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டான்.

ஆனால், நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மைக்கு முக்கிய காரணம் ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மட்டுமே என குற்றஞ்சாட்டியுள்ள ஆளும் ஆட்சிக்குழு,

அவர்களே தீ வைப்பு சம்பவங்களிலும் வன்முறையிலும் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, 13 மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் 60 க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் பாதுகாப்புப் படையினர் ஆக்கிரமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!