ஈரானில் தாயை தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றிய மகள்: அதிர்ச்சி பின்னணி!

ஈரானில் பெண் ஒருவர் காட்டுமிராண்டித்தனமான மரண தண்டனைச் சட்டத்தின் கீழ் தனது சொந்த மகளால் தூக்கிலிடப்பட்டார். ஈரானில் துர்நடத்தை கொண்ட கணவரை தமது தந்தையின் உதவியுடன் மரியம் கரிமி என்பவர் கொலை செய்த வழக்கிலேயே அவர் தூக்கிலிடப்பட்டார். இந்த வழக்கில் நீண்ட 13 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்த மரியம் கரிமி கடந்த 13ம் திகதி ராஷ்ட் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டார்.

மரியம் தமது கணவரை கொலை செய்யும் போது அவரது மகளுக்கு 6 வயது. இந்த வழக்கில் தமது தாயாருக்கு மனிப்பு வழங்க மறுத்த அவர், மரண தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டனையை நிறைவேற்றியுள்ளார்.

6 வயதில் இருந்தே தந்தையின் குடும்பத்தாரின் அரவணைப்பில் வாழ்ந்த அவருக்கு, கடந்த 13 ஆண்டுகளாக பெற்றோர் இருவரும் இறந்ததாகவே கூறி வளர்க்கப்பட்டுள்ளார்.

ஆனால், தாயாரின் மரண தண்டனையை மகளே நிறைவேற்ற வேண்டும் என்ற பழி வாங்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக சில வாரங்களுக்கு முன்னர் அந்த மகளிடம் உண்மையை கூறியுள்ளனர்.

மட்டுமின்றி, உளவியல் ரீதியாக அவர் தயாராகும் பொருட்டே, அவருக்கு உண்மைகள் கூறப்பட்டது எனவும் தெரிய வந்துள்ளது.

கணவனை கொல்லும் மனைவியை சொந்த மகளால் தண்டிக்கலாம் என இஸ்லாமிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாக ஈரான் மனித உரிமைகள் குழு தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து, மரியமின் தந்தை இப்ராஹிம் மகளின் சடலம் தொங்குவதைக் காண அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஈரானில் 2019ல் மட்டும் கிசாஸ் என்ற இஸ்லாமிய சட்டத்தின் படி 225 பேர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மட்டுமின்றி ஒரே சிறைச்சாலையில் மட்டும் 68 பேர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!