பிரேரணையைத் தோற்கடிக்க அரசுடன் இணைந்து தமிழ்க் கட்சிகள் முயன்றன!

ஐ.நா. மனித உரிமை பேரவையின் பிரேரணையினை தோற்கடிக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து கைக்கூலிகளாகச் செயற்பட்ட சில தமிழ் கட்சிகள், பிரேரணையினால் தமிழ் மக்களுக்கு எந்தப் பிரயோசனமும் இல்லையென பிரசாரம் செய்து வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“ ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையினையடுத்து குறித்த கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானத்தினை பிரித்தானியா தலைமையிலான ஆறு இணை அனுசரணை நாடுகள் முன்வைத்தன. அது முன்வைக்கப்படுவதற்கு முன்பாக தமிழ் தேசியக் கட்சிகள் என்ற அடிப்படையில் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தினைக் கொண்டுள்ள மூன்று கட்சிகள் இணைந்து கடிதம் ஒன்றினை உறுப்பு நாடுகளுக்கு அனுப்பியிருந்தோம்.

அதில் பொறுப்புக்கூறல் என்ற பகுதியை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியே கொண்டுவர வேண்டும். இலங்கை உறுதியளித்த பல விடயங்களை நிறைவேற்றத் தவறியதன் காரணமாகவும் புதிய ஆட்சி பதவியேற்றதன் பின்னர் அந்தத் தீர்மானங்களுக்கு ஒத்துழைக்கமாட்டோம் என்று அறிவித்திருந்த நிலையில் பொறுப்புக்கூறல் என்ற வியடம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியே செல்லவேண்டும், அது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்காக செயலாளர் நாயகத்திடமும் பொதுச்சபையிலும் கொண்டுவரப்பட வேண்டும். ஏனென்றால் அது பாதுகாப்புச் சபை மூலமாக மட்டும்தான் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்படலாம்.

இதனுடன் இணைந்து சாட்சியங்களைச் சேகரிப்பது, பாதுகாப்பது போன்ற சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அண்மையில் சிரியாவிலும் மியன்மாரிலும் இவ்வாறான பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. அதனைப் பின்பற்றி அப்படியான பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கேட்டிருந்தோம்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட பிரேரரணையில் அந்த விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. உள்நாட்டுப் பொறிமுறை, பொறுப்புக்கூறல் தொடர்பாக செய்யப்படமாட்டாது. இலங்கைக்கு அது தொடர்பான கரிசனையில்லையென அந்தத் தீர்மானம் சொல்லுகின்றது. அதுமட்டுமன்றி முழுமையான பொறுப்புக்கூறல் சர்வதேச ரீதியில் கொண்டுவரப்பட வேண்டும். அதற்கு முன்பாக இந்த விடயங்கள் கொண்டுசெல்லப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கின்றது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினைப் பொறுத்தவரையில் அதன் அங்கம் சர்வதேச நீதிமன்றத்திற்கு எதனையும் பாரப்படுத்தமுடியாது.

அதற்கான அதிகாரம் அவர்களிடத்தில் இல்லை. அதனை பாதுகாப்பு சபை மட்டும்தான் செய்யமுடியும். அதனால் குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துங்கள் என்று அவர்கள் சொல்லமுடியாது. இதன்காரணமாகத்தான் அதன் பெயரைக் குறிப்பிடாமல் ஒரு முழுமைபெற்ற பொறிமுறைக்கூடாக இது கொண்டுசெல்லப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார்கள்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்பதை அவர்கள் நேரடியாகச் சொல்லவில்லை. நாங்கள் கேட்டுக்கொண்ட விடயம் அங்கு செய்யப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து அது வெளியே கொண்டுவரப்பட்டுள்ளது. சாட்சியங்களைச் சேகரிப்பது, பேணுவது, பரிசீலனை செய்வது என்ற மூன்றையும் மேற்கொள்வதற்கான பொறிமுறை ஏற்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில், இது தமிழ் மக்கள் சார்பிலே கேட்டுக்கொண்டதற்குக் கிடைத்த வெற்றியாகும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக எப்போதையும்போல பலர் இதனை ஒரு தோல்வியாகச் சித்தரித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

அரசாங்கத்துடன் இணைந்து இந்தப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்கு என்று சிலர் செயற்பட்டனர். பிரேரணையில் எந்தப் பிரயோசனமும் இல்லை, இந்தத் தீர்மானம் தேவையற்றது என்றெல்லாம் சொல்லி அரசாங்கத்தின் கைக்கூலிகளாகச் செயற்பட்ட சில தமிழ் கட்சிகள், தற்போதும் அதில் எந்தப் பிரயோசனமும் இல்லையென்ற பிரசாரத்தினை தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுத்து வருகின்றனர்.

எந்ததெந்தக் கருவியை எந்ததெந்த வகையிலே உபயோகிக்க முடியும்? உச்சளவுக்கு ஒரு கருவியை எந்தளவுக்கு உபயோகிக்க முடியும் என்று தெரிந்தவர்களுக்கு ஐ.நா.மனித உரிமைப் பேரவை தீர்மானம் வலுவான தீர்மானம் என்று தெரியும்.

சாட்சியங்களைச் சேகரிக்கின்ற பணி உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆகையினால், இந்தப் பிரேரணையைக் கொண்டுவந்த பிரித்தானியா உட்பட்ட நாடுகளுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோம். 11 நாடுகள்தான் பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருந்தாலும் அதற்கு இரட்டிப்பான நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாகக் காட்டுகின்றது.

நடு நிலையாக இருந்த நாடுகளின் மனநிலையிலும் மாற்றமுள்ளது. இந்தியா நடுநிலை வகிப்பதற்கு முன்பாக வெளியிட்ட அறிக்கையில் தெட்டத்தெளிவாக இலங்கையின் ஆட்புல ஒற்றுமைக்குச் சமாந்தரமாக தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதைச் சொல்லியுள்ளார்கள்.

தமிழர்களின் அபிலாசைகளை அடைவதற்கு அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கின்றோம் என்று திட்டவட்டமாக அறிக்கையூடாகச் சொல்லப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, அரசியல் அதிகாரங்கள் பகிரப்படுவதும் 13ஆவது திருத்ததில் உள்ள விடயங்கள் அமுல்படுத்தப்படுவதும் எந்தத் தங்குதடையுமன்றி மாகாண சபைகள் இயங்குவதும் விரைவாக மாகாணசபை தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்றும் தெளிவாக நடுநிலை வகித்த இந்தியா சொல்லியுள்ளது.

இது கால அவகாசம் வழங்கும் தீர்மானம் அல்ல. என்றைக்கும் எந்தத் தீர்மானங்களும் இலங்கைக்குக் கால அவகசாம் வழங்குவதில்லை. ஒருவருட வாய் மூலமாக அறிக்கை என்ற விடயம் இன்று ஆறு மாதங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இரண்டு வருட இறுதியில் எழுத்துமூலமான அறிக்கையென்று சொல்லப்பட்டுள்ளது. அது மனித உரிமை உயர்ஸ்தானிகருக்குக் கொடுக்கப்பட்ட ஒரு காலக்கெடு. அது நாட்டுக்குக் கொடுக்கின்ற காலக்கெடு அல்ல. இது தொடர்பாக சிலர் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

உண்மையில் மிக முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எமது மக்களுக்குக் கிடைக்கவேண்டிய நீதி, பரிகாரம் காலம் கடந்தாலும் மெதுவாக நகர்ந்தாலும் இறுதியில் அதனை நாங்கள் அடைவோம் என்ற நம்பிக்கையினை வைத்திருக்க உதவியுள்ளது.

அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவுக்கு எண்கணிதம் தெரியும் என்று நம்பியிருந்தேன். இப்போது அது தொடர்பாக சந்தேகம் வந்துள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் சாதாரண பிரேரணையை நிறைவேற்றுவதாக இருந்தால் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கைதான் கருத்தில்கொள்ளப்படும். வாக்களிக்காதவர்கள் தொடர்பாக கருத்தில் கொள்வதில்லை.

நாட்டின் நிலைமை தற்போது மோசமான நிலையினை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. ஏதாவது, கட்டத்தைத் தாண்டி படுமோசமான நிலைக்கு நாடு சென்றால் ஐ.நா. பாதுகாப்புச் சபை மூலமாக சமாதானப் படையினை நிறுத்துவதற்கான வாய்ப்பு இருக்கும்” என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!