சக மாணவனை சுத்தியலால் அடித்துக்கொன்ற பள்ளி சிறுவன்: வெளியான காரணம்!

தினமும் தன்னை கேலி செய்து வந்த சிறுவனை சக மாணவன் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள கண்டமனூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் தனசேகரன் (வயது 17). தனசேகரன் கண்டமனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இதே பகுதியைச் சார்ந்த சிறுவனும் தனசேகரன் பள்ளியில் பயின்று வந்துள்ளார்

தனசேகரன் அவ்வப்போது அந்த சிறுவனை கேலி செய்து வந்துள்ளார். இதனால் தனசேகரன் கேலி செய்த மாணவர்களுக்கும், தனசேகரனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் தனசேகரன் மதிய உணவு இடைவேளையில், பள்ளி வளாகத்தில் வைத்து மீண்டும் சிறுவனை கேலி செய்துள்ளார்.

இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கிய நிலையில், கேலிக்குள்ளாகிய மாணவன் தான் கையில் வைத்திருந்த சுத்தியலால் பலமாக அடித்தார். இந்த சம்பவத்தில் தனசேகரன் இரத்த வெள்ளத்தில் மயங்கி விழவே, சகமாணவர்கள் இது குறித்த தகவலை ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தி உள்ளனர்.

இதனையடுத்து தனசேகரனை மீட்ட ஆசிரியர்கள், தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கண்டமனூர் காவல்துறையினர், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த தகவல் அறிந்து வந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், கண்டமனூர் தேனி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் கலைந்து சென்றனர். மேலும், கொலை செய்த சிறுவனை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!