யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் பிணையில் விடுதலை!

யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நேற்றிரவு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட நிலையில் 2 இலட்சம் ரூபா ஆட்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜுன் மாதம் 26ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சபையினால் மாநகரத்தின் தூய்மையை பேண உருவாக்கப்பட்ட காவல்படையின் சீருடை புலிகளின் காவல்துறை சீருடையை ஒத்தது என பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்றுமுன்தினம் இரவு வாக்கு மூலம் வழங்க வருமாறு முதல்வர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டார்.

பொலிஸ் நிலையத்தில் சுமார் 06 மணி நேரம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் புலிகளை மீளுருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வவுனியாவில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

நீண்ட நேரம் முன்னெடுத்த விசாரணைகளின் பின்னர் நேற்று இரவு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் ‘பி’ அறிக்கை தாக்கல் செய்யப்படாததால் தண்டனை சட்டக்கோவை பிரிவின் (120, 332, 343) கீழ் மணிவண்ணன் முற்படுத்தப்பட்டார்.

இதன்படி பொலிஸாரின் விளக்கமறியல் விண்ணப்பத்தை நிராகரித்த நீதிபதி, பிணை வழங்கி விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

மணிவண்ணன் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் 25 இற்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!