கட்டுப்பாட்டு விலையில் தரமான தேங்காய் எண்ணெயினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை

நாட்டில் தரமான தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்றை கட்டுப்பாட்டு விலைக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தரமான உள்நாட்டு தேங்காய் எண்ணெய் போத்தலொன்றை 450 ரூபாவுக்கு பெற்றுக் கொடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன், இந்த வருட இறுதி வரை தரமான, நுகர்வோர் பாவனைக்கு ஏற்ற, சுத்தமான உள்நாட்டு தேங்காய் எண்ணெயை குறித்த விலைக்கு, சதோச மற்றும் கூட்டுறவு சங்கங்களின் ஊடாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்த வருட இறுதி வரை தேங்காய் எண்ணெய் விலையில் அதிகரிப்பு ஏற்படாது எனவும், அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், எந்தவொரு தட்டுப்பாடும் இன்றி 450 ரூபாவுக்கு தேங்காய் எண்ணெயைப் பெற்றுக் கொடுக்க, அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நுகர்வோர் பாவனைக்கு பொருத்தமற்ற, இரசாயனங்கள் உள்ளடக்கப்பட்ட 105 மெட்ரிக் டொன் தேங்காய் எண்ணெய் மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த தேங்காய் எண்ணெய் தொகையானது பார்பரா எனும் கப்பல் மூலம் மலேஷியாவுக்கு நேற்றைய தினம் மீள் ஏற்றுமதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!