ஜனாதிபதியினால் அச்சுறுத்தப்பட்ட முதல் நபர் விஜயதாச அல்ல!

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் விஜயதாச ராஜபக்ஷ மட்டும் அச்சுறுத்தப்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரையே ஜனாதிபதி அச்சுறுத்தும் போது சாதாரண பொதுமக்களின் நிலை என்ன என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

எனவே மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களால் நாட்டை ஆட்சி செய்ய ஜனாதிபதியும் அரசாங்கமும் மேற்கொண்ட முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

“கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்து தொடர்பாக தனது கருத்தை தெரிவிக்க ஜனாதிபதிக்கு உரிமை உண்டு. ஆனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சாதாரண மக்களின் கருத்திற்கு பதிலளிக்க பல்வேறு வழிகள் உள்ளன.

ஜனாதிபதி ஊடக பிரிவு அல்லது அரசாங்க தகவல் திணைக்களம் ஊடாக அந்த அறிக்கைக்கு பதிலளித்திருக்க முடியும். மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களால் நாட்டை ஆட்சி செய்ய ஜனாதிபதியும் அரசாங்கமும் மேற்கொண்ட முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும்” என கூறினார்.

நாடு குறித்து முடிவுகளை எடுக்கும்போது மக்களின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் எனவே தான் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையால் அங்கீகரிக்க வேண்டும் என கோரி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

நீண்ட விடுமுறை காலத்தில் நாடாளுமன்றில் வரைபை சமர்ப்பித்து குறித்த சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்திற்குச் செல்வதற்கான உரிமையை கூட அரசாங்கம் பறித்திருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!