உலகையே உலுக்கிய ஜார்ஜ் பிளாய்ட் மரண வழக்கு: நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

உலகையே உலுக்கிய ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு காரணமான பொலிசாரை நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்துள்ளது. அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியா பொலிஸ் நகரைச் சேர்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட், கடந்த ஆண்டு மே மாதம் 25-ஆம் திகதி மினியாபொலிஸ் நகரில் உள்ள ஒரு கடைக்குச் சென்று பொருட்களை வாங்கினார்.‌

அப்போது அவர் வழங்கிய பணத்தில் 20டொலர் கள்ளநோட்டு இருந்ததாக கடையின் ஊழியர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, பொலிஸ் அதிகாரி டெரிக் சாவின் தலைமையில் 4 பொலிசார் அங்கு விரைந்தனர்.‌ பின்னர் அவர்கள் புகார் தொடர்பாக விசாரிக்க அழைத்தபோது பிளாய்ட் பொலிஸ் வாகனத்தில் ஏற மறுத்ததாக கூறப்பட்டது. இதனால் பொலிஸ் அதிகாரி டெரிக் சாவின் ஜார்ஜ் பிளாய்ட்டை தரையில் கிடத்தி அவர் கழுத்தை கால் முட்டியால் அழுத்தினார்.

என்னால் மூச்சுவிட முடியவில்லை எழுந்திருங்கள் என ஜார்ஜ் பிளாய்ட் கெஞ்சிய போதும் விடவில்லை. சிறிது நேரத்தில் ஜார்ஜ் பிளாய்ட் உயிரிழந்தார். ஜார்ஜ் பிளாய்ட் கழுத்தில் போலீஸ் அதிகாரி கால் முட்டியை வைத்து அழுத்தியது. இதனால் அவர் மூச்சுவிட முடியாமல் திணறி உயிரிழந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரை கண்ணீர் சிந்த வைத்தது.

இப்படி காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொண்ட பொலிசாருக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும் என்று அமெரிக்கா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் போராட்டம் வெடித்தது.

இந்த சம்பவம் அமெரிக்காவையே உலுக்கியது. இந்நிலையில், ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரி டெரிக் சாவின் உள்பட 4 பொலிசார் மற்றும் மினியாபோலீஸ் நகர நிர்வாகத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதில் டெரிக் சாவின் உள்பட 4 பொலிசாரும் பணிநீக்கம் செய்யப்பட்டு, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். டெரிக் சாவின் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

டெரிக் சாவின் மீதான விசாரணை மினசோட்டாவின் ஹென்னெபின் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணையின் முடிவில், டெரிக் சாவின் குற்றவாளி என நிரூபணம் செய்யப்பட்டு உள்ளது.

அவரின் குற்றத்துக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு 40-ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த வழக்கின் விசாரணை முடிவு இன்று என்பதால், பெரும்பாலான மக்கள் தீர்ப்பு என்னவாக இருக்குமோ என்று இருந்தனர். ஆனால் அவர்கள் நினைத்தது போன்று தீர்ப்பு வந்ததால், இதை அவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!