உருமாறிய கொரோனாவை கண்டறிவதில் சிக்கல்: மருத்துவர் எச்சரிக்கை!

நாட்டில் கொரோனா பாதிப்பின் புதிய அலை தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டில் காணப்பட்ட முதல் அலையை விட 2வது அலையில் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து காணப்படுகின்றன. உருமாறிய கொரோனா வைரசும் இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதுபற்றி டெல்லியில் உள்ள ஹெல்வேதியா மருத்துவ மையத்தின் டாக்டர் சவுரதீப்த சந்திரா கூறும்பொழுது, ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனையில் புதிய உருமாறிய கொரோனா வைரசை கண்டறிய முடிவதில்லை.

இரண்டு மற்றும் மூன்று வகையில் உருமாறிய கொரோனா வைரசானது கண்டறியப்பட்டு உள்ளது என நான் நம்புகிறேன். இவற்றின் வடிவமைப்பில் ஏற்பட்ட மாற்றத்தினால், ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனையில் அவற்றை கண்டறிய முடிவதில்லை. இந்த புதிய வகைகள், புதிய அறிகுறிகளை தோற்றுவிக்க கூடியவையாக காணப்படுகின்றன.

வழக்கம்போல் காணக்கூடிய அறிகுறிகளான வறட்சி, உடல் வலி, காய்ச்சல், வாசனை மற்றும் சுவை இழப்பு ஆகியவற்றுடன் கூட வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, தோலில் புண் ஏற்படுதல், குழப்ப நிலை, கை மற்றும் கால் விரல்களின் நிறங்கள் நீல நிறத்திற்கு மாறுதல், மூக்கு மற்றும் தொண்டை வழியே ரத்தம் வருதல் போன்றவையும் காணப்படுகின்றன.

முதல் அலையை விட நாட்டில் 2வது அலை ஆபத்து நிறைந்த ஒன்றாக உள்ளது. பரிசோதனை மையங்கள் உள்பட கூட்ட நெருக்கடியான இடங்களில் மக்கள் ஒன்று கூடுவது தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் புதிய வகை உருமாறிய வைரசானது எளிதில் தொற்றும் தன்மை கொண்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

நம்முடைய சுகாதார உட்கட்டமைப்பும் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளை கையாளும் வகையில் இல்லை. ஆக்சிஜன், படுக்கை மற்றும் அத்தியாவசிய மருந்துகளும் பற்றாக்குறையாக காணப்படுகிறது. உயிரிழப்பு விகிதமும் கடந்த அலையை விட அதிகரித்து காணப்படுகிறது.

எனினும், நோயாளிகள் பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்புகின்றனர். அதனால் உயிரிழப்பு விகிதம் கட்டுக்குள் உள்ளது என எச்சரிக்கையுடனேயே கூற வேண்டியுள்ளது. தேவையற்ற பயணங்களை மக்கள் தவிர்க்க வேண்டும். ஒரு சில வாரங்களில் பாதிப்பு உச்சம் அடையும். அதன்பின்னர் குறையும். அதனால், மக்கள் கூட்ட நெருக்கடியான அனைத்து இடங்களையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது தொற்று பரவ வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!