இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் மு.க.ஸ்டாலின்!

திமுக சட்டமன்றக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். தமிழகத்தில் திமுக அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு திமுக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

அதில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 125 பேர், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 8 பேர் என 133 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் முன்மொழிய சட்டமன்றக்குழு தலைவராக ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்றனர். அங்கு அனைவரும் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து தமிழகத்தில் ஆட்சியமைக்க இன்று உரிமை கோரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காலை 10 மணியளவில் ஆளுநருடன் நடைபெறும் சந்திப்பின்போது அமைச்சரவை பட்டியலை ஸ்டாலின் வழங்குவார் என்றும் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!