வடக்கில் 28 புதிய தொற்றாளர்கள் – இருவர் பலி!

வடக்கு மாகாணத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆகிய இரண்டு ஆய்வுகூடங்களில் 807 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 20 பேரும் கிளிநொச்சியில் 7 பேரும், முல்லைத்தீவில் ஒருவரும் என 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 6 பேருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 5 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நான்கு பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் நால்வரும் தொற்றாளர்களுடன் முதல்நிலைத் தொடர்புடையவர்கள்.

சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் நால்வரில் இருவர் தொற்றாளர்களுடன் முதல்நிலைத் தொடர்புடையவர்கள். இருவர் வீதி சீரமைப்புப் பணியில் ஈடுபடுபவர்கள்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்குச் சென்ற 7 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்குச் சென்ற ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று இரண்டு முதியவர்கள் கொவிட்-19 நோயால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் மாநகர் யாழ்.றோட் பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய ஆண். மற்றையவர் இளவாலையைச் சேர்ந்த 75 வயதுடைய பெண். இதன்மூலம் கொவிட்-19 நோயினால் யாழ்ப்பாணத்தில் 21 பேரும் வடக்கு மாகாணத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர்.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!