வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் கொரோனா சிகிச்சை!

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டு வருகிறது. நாட்டில் கொவிட் 19 மூன்றாம் அலையின் தாக்கமானது வேகமாக அதிகரித்து வரும் நிலையில், நாடு பூராகவும் 8000 நோயாளர்கள் சிகிச்சை பெறத்தக்க வகையில் கொரோனா சிகிச்சை மையங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொவிட் செயலணியின் தலைவரும், இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றாளர்களை தங்க வைத்து சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 100 கட்டில்களைக் கொண்டதாக அமைக்கப்படவுள்ள குறித்த சிகிச்சை நிலையத்திற்கு தேவையான ஏற்பாடுகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

நோயாளருக்கு தேவையான மலசல கூடங்களை அமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, குறித்த பொருளாதார நிலையம் அமைக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் இன்னும் பாவனைக்கு திறக்கப்படாமை குறிப்பிடத்தக்கது.