புனித நதியான கங்கையில் மிதக்கும் சடலங்கள்: அச்சத்தில் மக்கள்!

இந்தியாவின் கங்கை ஆற்றின் கரைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் சடலங்கள் மிதப்பதால், அப்பகுதி மக்கள் கடும் பீதியில் உள்ளனர். கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக, இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வருகிறது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 4,000 பேர் கொரோனா வைரஸால் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

இதனால் இதன் இறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 250,000-ஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் பல வல்லுநர்கள் உண்மையான தினசரி எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

ஏனெனில், இந்த தொற்றுநோய் நகரங்களில் இருந்து அதிகமான கிராமப்புறங்களுக்கு பரவியுள்ளது, அங்கு மருத்துவமனைகள் குறைவாகவும் தொலைவில் உள்ளதால், இங்கு ஏற்படும் உயிரிழப்புகளை கணக்கிடமுடியவில்லை.

இதனால் இது துல்லியமான கணக்கெடுப்பாக இருக்காது என்று நம்பப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவின் வட மாநிலங்களில் இறந்தவர்களின் உடல்கள் ஆற்றில் காணப்படுகின்றன.

குறிப்பாக பிகாரின் Buxar மாவட்டத்தின் கங்கை ஆற்றங்கரையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதந்து கொண்டிருக்கின்றன.

இது குறித்து உள்ளூர் அதிகாரி அசோக் குமார் என்பவர் கூறுகையில், பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தின் எல்லைக்கு அருகே சுமார் 40 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தகன இடங்கள் அதிகமாக இருந்ததாலோ அல்லது உறவினர்கள் இறுதி சடங்குகளுக்கு விறகு வாங்க முடியாததாலோ உடல்கள் ஆற்றில் வீசப்பட்டிருக்கலாம் என்று நம்புகிறோம்.

சில உடல்கள் வீங்கியிருந்தன மற்றும் சில உடல்கள் ஓரளவு எரிக்கப்பட்ட நிலையில் உள்ளன. அவை பல நாட்கள் ஆற்றில் கிடப்பது போல் தெரிவதாக கூறினார். அனைத்து உடல்களையும் அப்புறப்படுத்தவோ, அடக்கம் செய்யவோ அல்லது தகனம் செய்யவோ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், கொரோனா எளிதில் ஒருவரிடம் இருந்து பரவும் என்பதால், இப்படி ஆற்றங்கரையில் கொரோனா நோயாளிகளின் சடலங்கள் மிதப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!