துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்ற தருணம் எப்படியிருந்தது- டுவிட்டரில் பத்திரிகையாளர்கள்

அமெரிக்காவின் அனாபொலிஸ் நகரத்தில் உள்ள கப்பிட்டல் கசட் பத்திரிகை நிறுவனத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிபிரயோகத்தில் ஐவர் கொல்லப்பட்டுள்ள அதேவேளை சம்பவம் இடம்பெற்றவேளை அலுவலகத்தில் காணப்பட்ட பத்திரிகையாளர்கள் தங்கள் அனுபவங்களை டுவிட்டர்மூலம் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

நபர் ஒருவர் துப்பாக்கிபிரயோகத்தில் ஈடுபடுகின்றார் தயவு செய்து காப்பாற்றுங்கள் என அன்டனி மெசெஞ்சர் என்பவர் டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.

தற்போது அவர் பாதுகாப்பாக உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனிநபர் ஒருவர் எங்கள் அலுவலகத்தில் உள்ள பலர் மீது துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் சிலர் கொல்லப்பட்டுவிட்டனர் என பில் டேவிஸ் என்பவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

பின்னர் பல்டிமோர் சன்னிற்கு கருத்து தெரிவித்துள்ள அவர் துப்பாக்கிபிரயோகம் இடம்பெற்ற எங்கள் அலுவலகம் யுத்தம் இடம்பெறும் பகுதிபோல காணப்பட்டது என தெரிவித்துள்ளார்.

தனியொரு நபர் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்ற வேளை நாங்கள் எங்கள் மேசைகளிற்குள் ஒளிந்துகொண்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் மேசைக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் போது பலர் சுடப்படுவதை பார்ப்பது போல மோசமான அனுபவம் வேறு எதுவும் இருக்கமுடியாது, துப்பாக்கிரவைகள் முடிவடைந்த பின்னர் மீண்டும் அவர் தயாராவதை பார்ப்பது அதனை விடபயங்கரமானது என அவர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிபிரயோகம் முடிவடைந்த பின்னரும் அனைவரும் மேசைகளின் கீழ் ஒளிந்திருந்தோம்,உடனடியாக காவல்துறையினர் வந்தனர், துப்பாக்கிதாரியை கைதுசெய்தனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கப்பிட்டல் கசட்டின் பணியாளர்கள் தங்களுடைய மற்றும் சகாக்களின் பாதுகாப்பு குறித்தும் டுவிட்டரில் பதிவுசெய்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!