முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு 7 பொலிஸ் நிலையங்கள் தடை!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்குமாறு, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏழு பொலிஸ் நிலையங்களின் கோரிக்கையை ஏற்று 27 பேருக்கு எதிராக நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, மாங்குளம், ஒட்டுசுட்டான், மல்லாவி, ஐயன்கன்குளம், முள்ளியவளை ஆகிய ஏழு பொலிஸ் நிலையங்களால் தடையுத்தரவு கோரப்பட்டது.

அந்தவகையில், முல்லைத்தீவு பொலிஸாரால் .வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி, தமிழரசுக் கட்சி உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான பீற்றர் இளஞ்செழியன், கரைத்துறைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் கமலநாதன் விஜிந்தன், சமூக செயற்பாட்டாளர் ச.விமலேஸ்வரன் ஆகிய ஐவருக்கு எதிராக தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

அத்துடன், புதுக்குடியிருப்பு பொலிஸாரால் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆண்டிஐயா புவனேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் கனகசுந்தரசுவாமி ஜெனமேஜெயந்த், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களான ஆறுமுகம் ஜோன்சன், கணபதிப்பிள்ளை விஜயகுமார் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களான தவராசா கணேஸ்வரம், சபாரத்னம் ஜெகநாதன், தம்பையா யோகேஸ்வரன், ஜேசுதாஸ் பீற்றர்யூட், வேலு தியாகராசா ஆகிய ஒன்பது பேருக்கு எதிராக தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

அதேபோல், மாங்குளம் பொலிஸாரால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சமூக செயற்பாட்டாளர்களான திலகநாதன் கிந்துஜன், ரகுநாதன் துஷ்யந்தன், குஞ்சுதநாதன் ரவிந்திரன், ராசமணி சிவராசா ஆகிய ஆறு பேருக்கு எதிராக நீதிமன்றத் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

அத்துடன், ஒட்டுசுட்டான் பொலிஸாரால் சின்னத்துரை வேதவனம், தர்மலிங்கம் ஜீவரத்னம், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இராமலிங்கம் சத்தியசீலன் ஆகிய மூவருக்கு எதிராக நீதிமன்றத் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

மேலும், ஐயன்கன்குளம் பொலிஸாரால் துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் ரகுநாதன் சுயன்சன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சமூக செயற்பாட்டாளர்களான தங்கராசா நிரஞ்சன், திலகநாதன் கிந்துஜன் ஆகிய ஐவருக்கு எதிராக முள்ளிவாய்க்கால் நினைகூரல் நிகழ்வு செய்ய நீதிமன்றில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

மல்லாவி பொலிஸாரால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சமூக செயற்பாட்டாளர்களான தங்கராசா நிரஞ்சன், ராசகுலசிங்கம் மாலுராசன், லிங்கேஸ்வரன் வைலஜா ஆகிய ஐவருக்கு எதிராக நீதிமன்றத் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

இதேவேளை, முள்ளியவளை பொலிஸார் பெயர் குறிப்பிடாமல் தமது பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வு செய்வதங்குத் தடையுத்தரவு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!