டெனீஸ்வரனை நீக்கிய வடக்கு முதல்வரின் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

வடக்கு மாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் பதவியில் இருந்து முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனை நீக்கிய, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உத்தரவுக்குத் இடைக்காலத் தடை விதித்துள்ளது சிறிலங்காவின் மேன்முறையீட்டு நீதிமன்றம்.

தம்மைப் பதவிநீக்கம் செய்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உத்தரவை செல்லுபடியற்றது என உத்தரவிடக் கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதியரசர்கள் குமுதினி விக்ரமசிங்க, ஜனக டி சில்வா ஆகியோரைக் கொண்ட அமர்வினால் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில், நீதியரசர்கள் குழாம், நேற்று இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.

முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனை பதவியில் இருந்து நீக்கிய வடக்கு மாகாண முதலமைச்சரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம், இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் வரை, அவரை அதே அமைச்சர் பதவியில் தொடர முடியும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் இந்த வழக்கு ஜூலை 9ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, டெனீஸ்வரனின் அமைச்சுப் பொறுப்பின் கீழ், இருந்த அமைச்சுக்களை தற்போது பகிர்ந்து கொண்டுள்ள, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அனந்தி சசிதரன், சிவநேசன் ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன், மாகாணசபையில் முதலமைச்சர் உள்ளிட்ட ஐந்து அமைச்சர்களே பதவி வகிக்க முடியுமாதலால், தற்போது, அமைச்சராக உள்ள ஒருவர் பதவி விலக வேண்டும் அல்லது நீக்கப்பட வேண்டும்.

இதனால் வடக்கு மாகாண அரசியலில் மீண்டும் குழப்பமான நிலைமைகள் ஏற்படக் கூடும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!