முதலமைச்சர், அனந்தி, சிவநேசன் பதவி விலகுவது நல்லது – டெனீஸ்வரன்

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தவறைச் சுட்டிக்காட்டவே அவரது உத்தரவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தேன் என்று வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்புக்குப் பின்னர், கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“எனது முயற்சி அநீதிக்கு எதிரானது. முதலமைச்சர் தான்தோன்றித்தனமாக எடுத்த இந்த முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது.

என்னை மீண்டும் பதவியிலமர்த்த வேண்டும் என்று எதிர்வரும் 9 ஆம் நாள் ஆளுநர், பிரதம செயலாளர் மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளையைப் பிறப்பிக்கும்.

அத்துடன் எனது அமைச்சை தற்போது வைத்திருக்கின்ற முதலமைச்சர், அனந்தி சசிதரன் மற்றும் சிவநேசன் உள்ளிட்டோர் பதவி விலகுவது நல்லது.

எனக்கு நீதி கிடைத்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

முதலமைச்சரின் தவறை சுட்டிக்காட்டவே நான் வழக்கைத் தொடர்ந்தேன். பழைய அமைச்சு எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் வந்துள்ளது.

என்னை நீக்கியவர்களுக்கு எனது அறிவுரையாக, இன்னுமொரு புதிய அமைச்சை உருவாக்கி என்னை தவிர்த்து நியமித்த புதியவர்களை நியமித்து விட்டு எனது பழைய அமைச்சை தாருங்கள்.

மக்களுக்கு என்னாலான நிறைய சேவைகளை செய்ய வேண்டி உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!