இந்தியாவில் இரண்டு குழந்தைகளை குட்டையில் வீசிவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சித்தூர் மாவட்டம் சி.ராமபுரம் குட்டையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கிடப்பதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தனர், பின்னாலேயே 2 குழந்தைகள் சடலமும் மிதந்து வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பொலிசார் அங்கு விரைந்து சென்று 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு ஸ்கூட்டர் ஒன்று இருந்தது. ஸ்கூட்டரின் பதிவெண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், இறந்து கிடந்தது பெனுமூர் அடுத்த குட்டியானம்பள்ளி கிராமத்தை சேர்ந்த கிஷோர் குமாரின் மனைவி நீரஜா மற்றும் அவரது குழந்தைகள் என்பது தெரியவந்தது.
கிஷோர்குமார், நீரஜா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சந்துரு என்ற மகனும், சைத்திரா என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 5 ஆண்டுக்கு முன்பு நீரஜாவின் பெற்றோர் இறந்ததால், கிஷோர் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் நீரஜாவிடம், தந்தை சொத்தை பிரித்து வாங்கி வரும்படி தொந்தரவு செய்தனர்.
இது தொடர்பாக கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த நீரஜா, குழந்தைகளை குட்டையில் தள்ளி கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!