நாடு முழுவதும் 30 மணி நேர பயணக்கட்டுப்பாடு அமுல்! இராணுவத் தளபதி விடுத்துள்ள கோரிக்கை

நாடு முழுவதும் 30 மணி நேர பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு 10 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட இந்த பயணக்கட்டுப்பாடு நாளை அதிகாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தபட்டுள்ளது.

இந்நிலையில், பயணத்தடை காலப்பகுதியில் பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், 25ம் திகதிக்கு பின்னர் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்துவது குறித்து இதுவரை எந்தவித தீர்மானமும் எட்டப்படவில்லை என இராணுவ தளபதி கூறியுள்ளார்.

எனினும், எதிர்வரும் நாட்களில் காணப்படுகின்ற நிலைமையை கருத்திற் கொண்டு பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுவது குறித்து அவதானம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு மட்டுமே இன்றைய தினம் பயணத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பயணத்தடை காலப்பகுதியில் நிலைமையை கண்காணிக்க சுமார் 20,000 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

பயணக் கட்டுப்பாட்டின் போது மாகாணங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் அமலில் இருக்கும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!