இளைஞர் கொல்லப்பட்ட விவகாரம் ; வியாழேந்திரனின் கருத்தால் மக்கள் அதிர்ச்சி

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மெய்பாதுகாவலரின் துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்து முற்போக்கு தமிழர் அமைப்பில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதென்பது ஒரு தனிப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிலுக்கும் பிறிதொரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் என்றும் தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என ஊடகங்கள் வாயிலாக கருத்து தெரிவித்திருக்கின்றார்

ஆனால் அதே கான்ஸ்டபிள் இராஜங்க அமைச்சர் வியாழேந்திரனின் முற்போக்கு தமிழர் அமைப்பின் ஒரு அங்கத்தவர் என்பதை அவருடைய முகநூல் வாயிலாக முற்போக்குத் தமிழர் அமைப்பின் திலீபனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஒரு பதிவையும் பதிவு செய்திருந்தமை சமூக வலைத்தளங்கள் ஊடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தனது அரசியல் இலாபத்திற்காக இளைஞர்களை உசுப்பேத்தி அவர்களை முற்போக்குத் தமிழர்கள் என்றும் அங்கத்துவம் பெற்றுள்ளதாக தனது முகநூலில் பெயரை பதிவிடும் வியாழேந்திரன் தனது அரசியலுக்கு ஒரு பிரச்சினை வந்து விட்டது என்றவுடன் அவர்களை கழட்டி விடுவது போன்ற கருத்து தெரிவிப்பென்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாகக் காணப்படுகின்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் செங்கலடியில் உள்ள திரையரங்கில் மதுபோதையில் இடம்பெற்ற கலவரம் கடைகளின் கண்ணாடிகளை உடைத்தவர்கள் பொலிஸாரால் கைது செய்யபட்டனர். இதன் போதும் முற்போக்கு தமிழர்கள் எனப்படும் வியாழேந்திரனின் கட்சி சார்ந்தவர்களே கைது செய்யப்பட்டிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2 மாதத்துக்கு முன்னதாகவும் மதுபோதையில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் செயலாளர் என அழைக்கப்படும் ஒருவரால் வாகனத்தை வேகமாக ஓட்டி விபத்துக்குள்ளாகி தப்பி ஒடி பின் பொலிஸாரால் கைது செய்த சம்பவமும் பதிவாகியிருந்தது.

தொடர்ச்சியாக இராஜாங்க அமைச்சரின் ஆதரவாளர்கள் அவருடைய அரசியல் கட்சி சார்ந்தவர்கள் இவ்வாறான சம்பவங்கள் மேற்கொண்ட போதும் பொலிஸார் சரியான சட்ட நடவடிக்கை எடுக்காததன் பிரதி பலனே இன்று இந்த கொலைக்கான ஒரு தூண்டுகோலாக அமைந்துள்ளதாக பலராலும் பேசப்பட்டு வருகின்றது.

பல இளைஞர்கள் சிந்திக்க வேண்டிய ஒரு விடயம். தனது அரசியல் இருப்புக்காக முற்போக்கு தமிழர் தம்பி திலிபன் என பதிவிட்ட வியாழேந்திரன் தற்போது தனது கான்ஸ்டபிளுக்கும் ஒரு தனி நபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே கொலைக்கான காரணம் என்றும் – தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என தெரிவிப்பது என்பது ஒரு வேடிக்கையான விடயமாக தான் பார்க்க வேண்டி இருக்கின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எது எவ்வாறாக இருந்தாலும் சுட்டுக்கொல்லப்பட்ட அந்த இளைஞனின் மரணத்திற்கு பொறுப்பு கூற வேண்டியது இராஜாங்க அமைச்சர் என்பதே பலரது எதிர்பார்ப்பு. இது திட்டமிடப்பட்ட கொலையா? அல்லது தனிப்பட்ட பிரச்சனையா என்ற உண்மை வெளிவர வேண்டும்.

ஆகவே இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இது சம்பந்தமாக தனது முற்போக்கு தமிழர் அமைப்பு மீள்பரிசீலனை செய்து மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் அவர்களது நடவடிக்கை அமைய வேண்டும் என்பதே இன்று மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது என நடுநிலை மக்கள் தெரிவிக்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!