உயிர்த்த ஞாயிறு தாக்குதல் -பிரதான சூத்திரதாரியுடன் தொடர்புடைய மற்றுமொருவர் கைது

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மொஹமட் சஹ்ரான் ஹாசிமின் அடிப்படைவாத பயிற்சிகளில் பங்கேற்ற குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேக நபர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொச்சிக்கடை தலுவகொடுவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது நாரம்மலை பகுதியில் நேற்று குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த சந்தேக நபர் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகால பகுதியில் மொஹமட் சஹ்ரான் ஹாசிமின் அடிப்படைவாத பயிற்சிகளில் கலந்துகொண்டுள்ளமை மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மொஹமட் சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்டபிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!