தொடரும் போராட்டம்: பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு!

“வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் பேச, மத்திய அரசு தயாராக உள்ளது,” என, மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களின் விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், டில்லி எல்லையில் எட்டு மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களுடன் மத்திய அரசு, 11 முறை பேச்சு நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை.இந்நிலையில் மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று கூறியதாவது: விவசாய சட்டங்களை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச, மத்திய அரசு தயாராக உள்ளது. இந்த சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை ரத்தாகும் என்ற பேச்சுக்கே இடமில்லை.

விவசாயிகள் போராட்டத்தை துவக்கிய பின், விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்யப்படுவது அதிகரித்துள்ளது. விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் தான் இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதனால் போராட்டத்தை கைவிட்டு, மத்திய அரசுடன் ஆக்கப்பூர்வமாக பேச விவசாய அமைப்புகள் முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!