சீனாவிடம் கடன் பெற்றது இராஜதந்திரம் என்கிறார் கோத்தா

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, சீனாவிடமிருந்து கடன் பெற்றது ஒரு இராஜந்திரமே என்று கூறியுள்ளார், முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச.

மாத்தளையில் நடந்த, கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

“மீண்டும், மகிந்த உருவானால், தற்போதுள்ள ஜனநாயகம் அழிக்கப்படும் என்று சிலர் கூறி வருகின்றனர். ஆனால், 1948 ஆம் ஆண்டு தொடக்கம், எந்த தலைவர்களும் நாட்டில் உறுதியான ஜனநாயகத்தை தோற்றுவிக்கவில்லை.

30 ஆண்டுகளாக நிலவிய போருக்கு முடிவுகட்டி, பயங்கரவாதத்தை முற்றாக அழித்து நாட்டை ஒன்றுபடுத்தியவர், மீண்டும் அந்த கொடிய யுகத்தினை ஏற்படுத்தமாட்டார்.

மகிந்த ராஜபக்ச அனைத்துலக கடன் நிறுவனங்களிடமிருந்து கடன் பெறாமல் சீனாவிடமிருந்து கடன் பெற்றது ஒரு இராஜந்திரமே.

ஏனென்றால், ஒரு குறித்த நிறுவனத்திடமிருந்து கடன் பெற்றால் அதன் அழுத்தங்களின் மத்தியிலே அரசாங்கத்தை முன்னெடுத்து செல்ல வேண்டியிருக்கும்

இதன் காரணமாகவே, தற்போதைய அரசாங்கம் இன்று அனைத்துலக நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது” என்றும் அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!