அச்சுறுத்தல் இன்னமும் குறையவில்லை!

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் அச்சுறுத்தல் இன்னமும் குறையவில்லை என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஏற்கனவே எமது நாட்டில் திரிபடைந்த டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டிருக்கும் நிலையில், மேலும் பல டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கக்கூடும்.

எனவே பொதுமக்கள் உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி அவதானத்துடன் செயற்படாவிட்டால், இந்த டெல்டா வைரஸ் காரணமாக கொரோனா வைரஸ் பரவலின் நான்காவது அலைக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலையேற்படலாம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினரான வைத்தியநிபுணர் வாசன் ரட்ணசிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தின்கீழ் கடந்த வாரம் கொழும்பு மாவட்டத்தில் ஒரேநாளில் ஒரு இலட்சத்து 79 ஆயிரத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்கியிருந்தோம்.

ஆரம்பத்தில் நாளொன்றில் 10,000 – 15,000 வரையில் வழங்கப்பட்டுவந்த தடுப்பூசிகள், சுகாதார அமைச்சுடன் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இணைந்ததன் பின்னர் மேலும் செயற்திறன் பெற்றிருப்பதுடன் நாளொன்றில் வழங்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

எனவே இவ்வாறான அடிப்படையில் தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தை விரைந்து முன்னெடுத்து, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாட்டுமக்களைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது.

அதேவேளை நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் அச்சுறுத்தல் இன்னமும் குறையவில்லை என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சர்வதேச நாடுகளில் கொவிட் – 19 வைரஸின் புதிய திரிபுகள் பரவிவருகின்றன. ஏற்கனவே எமது நாட்டில் திரிபடைந்த டெல்டா வைரஸ் தொற்றாளர்கள்

அடையாளங்காணப்பட்டிருக்கும் நிலையில், மேலும் பல டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் சமூகத்தில் இருப்பதற்கான வாய்ப்புக்கள் உயர்வாகக் காணப்படுகின்றன. எனவே பொதுமக்கள் உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி அவதானத்துடன் செயற்படாவிட்டால், இந்த டெல்டா வைரஸ் காரணமாக கொரோனா வைரஸ் பரவலின் நான்காவது அலைக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலையேற்படலாம்.

மேலும் டெல்டா உட்பட கொவிட் – 19 வைரஸின் திரிபுகள் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளும் இடங்களை மேலும் விஸ்தரிக்கவேண்டியது அவசியமாகும். அதேவேளை இந்த வைரஸ் திரிபுகளின் பரம்பல் மற்றும் மாறுபாடு ஆகியவை தொடர்பிலும் உரியவாறு ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். சர்வதேச நாடுகள் பலவற்றிலும் திரிபடைந்த டெல்டா வைரஸின் தாக்கம் உயர்வாகக் காணப்படுகின்றது.

எனவே எதிர்வரும் காலங்களில் அதன் தாக்கம் இலங்கையிலும் வியாபிக்கக்கூடும். ஆகவே சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்களை தொடர்ந்தும் இறுக்கமாகக் கடைப்பிடிக்கவேண்டிய அவசியம் காணப்படுகின்றது என்று வலியுறுத்தினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!