111 நாடுகளில் கால்பதித்த டெல்டா வகை கொரோனா: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

111 நாடுகளில் காணப்படும் ‘டெல்டா’ வகை வைரஸ், பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவும் ஆபத்து உள்ளதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு வாராந்திர தொற்றுநோய் புள்ளிவிபர பட்டியலை நேற்று வெளியிட்டது. அதில் உலகில் 111 நாடுகளில் அதிக வீரியமுள்ள ‘டெல்டா’ வைரஸ் பரவியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்டா, ஆல்பா, காமா, பீட்டா என நான்கு வகை உருமாறிய வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மிக விரைவாக பரவும் ஆற்றல் டெல்டாவுக்குத் தான் உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனால் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. குறிப்பாக மிகக் குறைவாக தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் சுகாதார வசதிகளை உருவாக்குவதில் அதிக நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் 178 நாடுகளில் ஆல்பா வைரஸ் பரவல் பரவியுள்ள நிலையில், பீட்டா, காமா வைரஸ்கள் முறையே 123 மற்றும் 75 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது 13-ந் தேதி நிலவரப்படி டெல்டா வைரஸ், 111 நாடுகளில் பரவி உள்ளதாகவும் வரும் மாதங்களில் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் வைரசாக இது இருக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

பல நாடுகளில் நோய் கண்காணிப்பு,பரிசோதனை உள்ளிட்ட வசதிகள் குறைவாக உள்ளதால், எப்போது எந்த வகை கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!