தனிமைப்படுத்தல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் விடுவிப்பு!

முல்லைத்தீவு – கேப்பாபுலவு விமானப்படை தனிமைப்படுத்தல் மையத்தில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்க பொது செயலாளர் ஜோசெப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேரடங்கிய குழுவினர் கேப்பாபுலவு விமானப்படை முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 8 ஆம் திகதி கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு. பிணையில் விடுவிக்கப்பட்டனர். பின்னர் அவர்களை கொரோனா சுகாதார வழிகாட்டல்களை காரணம் காட்டி தனிமைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில், முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை முகாம் தனிமைப்படுத்தல் மையத்தில் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேரை தனிமைப்படுத்தினர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டதுடன், ஆசிரியர் சங்கங்கள், இணையவழி கற்பித்தல் புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றனர் .

இந்த நிலையில், 8 நாட்களின் பின்னர், முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை தனிமைப்படுத்தல் கண்காணிப்பில் இருந்து கொண்டு தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தினை நேற்று எட்டாவது நாளாக மேற்கொண்டு வந்த நிலையில் அவர்கள் அனைவரும் நேற்று மாலை விடுவிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்ட போதும் இன்றிரவு 9 மணியளவில் விமானப்படை முகாமில் இருந்து வெளியேறியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!