நியூயோர்க் டைம்ஸ்” பத்திரிகையில் வெளியான தகவலைத்தான் அரசாங்கமும் தெரிவித்து வருகிறது. எனவே அரசாங்கத்திற்கும் குறித்த பத்திரிகைக்குமிடையிலான தொடர்பு என்ன? அப்பத்திரிகைக்கு அத்தகவல் எவ்வாறு சென்றது என்பது குறித்து அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக் கும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வேண்டிக்கொண்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மாலை பத்தரமுல்லையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“நியூயோர்க் டைம்ஸ்” பத்திரிகையில் வெளியான செய்தி கடந்த சில தினங்களாக பேசப்பட்டு வருகிறது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி உள்ளிட்ட விடயங்களை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே குறித்த செய்தியை நோக்க வேண்டியுள்ளது.
மேலும் அப்பத்திரிகையில் வெளிவரும் செய்திகளின் உண்மைத் தன்மை குறித்து பிரச்சினை உள்ளது. கடந்த காலங்களில் அப்பத்திரிகையில் வெளியான தகவல்கள் பிழையானவை என்பதை அப்பத்திரிகையே பின்னர் ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும் சிலரின் அரசியல் தேவைகளுக்காக குறித்த பத்திரிகை தகவல் வெளியிடுவதாகவும் உலகளாவிய ரீதியில் அபிப்பிராயம் உள்ளது.
எனவே ஜனாதிபதித் தேர்தல் காலத் தில் மஹிந்த ராஜபக் ஷவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு சீனாவிடமிருந்து அவ்வாறு நிதி கிடைக்கவில்லை என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன். மேலும் அந்தப் பத்திரிகை அறிக்கையில் அந்நிதிக்கான காசோலை அலரி மாளிகையில் கையளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை அர்ஜுன் அலோசியஸிடமிருந்து சிலர் காசோலை பெற்று அதனை பணமாகவும் மாற்றியுள்ளனர். அது குறித்து முறையிடாத சில அரசியல்வாதிகள் அலரி மாளிகையின் நுழைவாயில் காவலர்களிடம் கையளிக்கப்பட்டதாகக் குறிப்பிடும் காசோலை தொடர்பில் நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறையிட்டுள்ளனர்.
மேலும் ஜனாதிபதித் தேர்தலின் பின் னர் ராய்ட்டர் செய்திச் சேவையிலும் இவ்வாறானதொரு தகவல் வெளியாகியிருந்தது. அதன் பின்னர் அரசாங்கம் துறைமுக நகரத் திட்டத்தை நிறுத்தியதுடன் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்தித் திட்டங்களையும் நிறுத்திவிட்டு குறித்த நிறுவனம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டது. பின்னர் ஒன்றரை வருடங்களின் பின்னர் மீண்டும் துறைமுக வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் அந்நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியிருந்தது.
எனவே அரசாங்கம் எதிர்பார்த்து மேற்கொள்ளும் விசாரணைகளில் தாம் எதிர்பார்க்கும் இலக்கை அடையமுடியாதவிடத்து அதனை ஊடகங்களுக்கு வழங்கி சேறு பூசுவதற்கு நடவடிக்கை எடுக்கிறது. எனவே குறித்த விசாரணை அறிக்கை எவ்வாறு “நியூயோர்க் டைம்ஸ்” பத்திரிகைக்கு வெளியிடப்பட்டது?
மேலும் “நியூயோர்க் டைம்ஸ்” பத்திரிகையில் வெளியான தகவலைத்தான் அரசாங்கமும் தெரிவித்து வருகிறது. எனவே அரசாங்கத்திற்கும் குறித்த பத்திரிகைக்குமிடையிலான தொடர்பு என்ன? அத்துடன் அப்பத்திரிகைக்கு குறித்த தகவல் எவ்வாறு சென்றது என்பது குறித்து அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும். மேலும் அப்பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள உண்மைக்குப் புறம்பான தகவல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சிரேஷ்ட சட்டத்தரணிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம்.
மேலும் யுத்தத்தை நிறைவுசெய்வத ற்கு ஒத்துழைப்பு வழங்கிய மற்றும் அதிகளவில் முதலீடுகளை மேற்கொண்ட சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்கு எதிராக நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகிறது. இது சர்வதேசப் பிரச்சினையாகும். ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு சீனா நிதியுதவி வழங்கியதாக குறிப்படுகின்றமை சீன அரசாங்கத்துடனான பிரச்சினையாகும்.
மேலும் சீனா, ரஷ்யா போன்ற நாடு கள் எமது நாட்டின் நட்பு நாடுகளாகும். அந்த நாடுகளுக்கு எதிராகவே நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது. ஆகவே மேற்கத்தேய நாடுகளுக்கும் கீழைத்தேய நாடுகளுக்குமிடையிலான பொருளாதாரப் போரில் அரசாங்கம் சிக்கிக்கொள்ளாது நாட்டுக்குத் தேவை யானதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!