ஆசிரியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க மக்களிடம் வரி அறவிட நேரிடும்! – பந்துல குணவர்தன

ஆசிரியர்கள் உட்பட தொழிற்சங்கங்கள் கோருவது போல் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமாயின், அதற்கு செலவாகும் பணத்தை பெற்றுக்கொள்ள முழு நாட்டு மக்கள் மீது அதிக வரிகளை சுமத்தி சுரண்ட நேரிடும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையும் உலகில் ஏனைய நாடுகளை போல மூன்று பிரதான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றது. அதில் ஒன்று அரச நிதி தொடர்பான பிரச்சினை. அடுத்த வெளிநாட்டு அந்நிய செலாவணி தொடர்பான பிரச்சினை. மூன்றாவது பொருளாதார வீழ்ச்சி அல்லது பொருளாதார பின்னடைவு தொடர்பான பிரச்சினை.

நாட்டு மக்கள் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டிய அடிப்படை பிரச்சனையே அரசாங்கத்திற்கு இருக்கின்றது.

அரசாங்கத்தின் செலவுகளை நிதியமைச்சர் என்ற வகையிலும் பசில் ராஜபக்சவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச அதேபோல் ஜனாதிபதியும் அல்ல நாட்டு மக்களே அரசாங்கத்தின் செலவுகளை சுமக்கின்றனர்.

அரசாங்கத்திற்கு வருமானம் கிடைக்க இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று வரி வருமானம். மற்றையது வரியற்ற வருமானம். 86 வீதமான வருமானம் மக்கள் மீது வரிகளை சுமத்தியே பெறப்படுகிறது.

நாட்டு மக்கள் மீது வரிகளை சுமத்தி நாங்கள் பெற்றுக்கொள்ளும் முழு வருமானம் ஆயிரத்து 216 பில்லியன் ரூபாய். இதனை பயன்படுத்தியே அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுவதுடன் ஓய்வூதியமும் வழங்கப்படுகிறது.

மூத்த பிரஜைகளுக்கு 2020 ஆம் ஆண்டில் நாங்கள் ஆயிரத்து 52 பில்லியன் பணத்தை செலவிட்டுள்ளோம். எவருக்கும் ஒரு மாதத்தில் 10 ஆயிரம், 15 ஆயிரம், 20 ஆயிரம் என சம்பளத்தை அதிகரிக்க முடியும்.

அப்படி அதிகரிக்கும் சம்பளத்திற்கான பணத்தை மக்கள் மீது வரிகளை சுமத்தியே சுரண்ட வேண்டும். வேறு மாற்று வழி வழிகளை இருந்தால் தயவு செய்து கூறுங்கள். அப்படியில்லை என்றால், அரச சொத்துக்களை விற்பனை செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!