ரெலோ அலுவலகத்தில் நினைவேந்தலுக்கு தடை!

மட்டக்களப்பில் ரெலோ காரியாலயத்தில் கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தலைச் செய்வதற்கு எதிராக இயக்கத்தின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினர் கோ. கருணாகரன் , முன்னாள் கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா ஆகியோருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1983 ஜூலையில் வெலிக்கடை சிறைச்சாலையில் குட்டுமணி தங்கத்துரை உட்பட 38 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு கோவிந்தன் வீதியிலுள்ள ரெலோ அலுவலகத்தில் 25 ம் திகதி தொடக்கம் 27 ம் திகதி வரை இடம்பெறவிருந்தது.

இந்த நினைவேந்தலில் அரசியல்வாதிகள் தொடக்கம் ஆதரவாளர்கள் அதிகமானோர் கலந்து கொள்ளவுள்ளதால் நாட்டில் தற்போது கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டியதன் முகமாகச் சுகாதார நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டியதன் காரணமாக இந்த நினைவேந்தல் நடைபெறாமல் நிறுத்துவதற்கான நீதிமன்ற தடை உத்தரவொன்றை வழங்கியுள்ளனர்.

மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றில் கோரியதற்கமைய நீதிமன்றம் இருவருக்கும் நினைவேந்தல் செய்வதற்குத் தடை விதித்து உத்தரவு ஒன்றை சனிக்கிழமை பிறப்பித்து கட்டளை வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!